ஐந்து காட்டுமிராண்டிகள்
From Wikipedia, the free encyclopedia
ஐந்து காட்டுமிராண்டிகள் என்பவர்கள் ஆன் சீனர் அல்லாத ஐந்து பண்டைய மக்களைக் குறிக்க சீனர்கள் பயன்படுத்திய சொற்கள் ஆகும். இவர்கள் கிழக்கு ஆன் அரசமரபின் காலத்தில் வட சீனாவுக்கு இடம்பெயர்ந்தனர். மேற்கு சின் அரசமரபை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்து தங்களது சொந்த இராச்சியங்களை 4-5ஆம் நூற்றண்டுகளில் ஏற்படுத்தினர்.[1][2][3] இவர்கள் சியோங்னு, சியே, சியான்பே, டி, மற்றும் கியாங் ஆகியோர் ஆவர்.[4][5][6] இந்த ஐந்து பழங்குடியினக் குழுக்களில் சியோங்னு மற்றும் சியான்பே ஆகியோர் வடக்கு புல்வெளிகளில் இருந்து வந்த நாடோடி மக்கள் ஆவர். சியோங்னு எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் சியான்பே மங்கோலியர்களாகத் தெரிகின்றனர். சியே மற்றொரு மேய்ச்சல் மக்கள் ஆவர். இவர்கள் சியோங்னுவின் ஒரு பிரிவாக இருந்திருக்கலாம். எனிசேயன் மக்களை சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம்.[7] டி மற்றும் கியாங் ஆகியோர் மேற்கு சீனாவின் உயர்நிலப்பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.[8] கியாங் பெரும்பாலும் கால்நடை மேய்ப்பாளர்களாக இருந்தனர். சீன-திபெத்திய (திபெத்திய-பர்மிய) மொழிகளைப் பேசினர். டி மக்கள் விவசாயிகள் ஆவர். இவர்கள் சீன-திபெத்திய[9] அல்லது துருக்கிய மொழியைப் பேசியிருக்கலாம் என கருதப்படுகிறது.[10]