கட்டிடக்கலைக் கோட்பாடு
From Wikipedia, the free encyclopedia
கட்டிடக்கலைக் கோட்பாடு (Architectural theory) என்பது, கட்டிடக்கலை தொடர்பான சிந்தனை, உரையாடல், எழுத்து ஆகியவற்றை உள்ளடக்குகிறது. பல கடிடக்கலைப் பள்ளிகளில் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பிக்கப்படுவதுடன், முன்னணிக் கட்டிடக் கலைஞர்கள் கோட்பாடுகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். பேச்சு அல்லது உரையாடல், நூல்கள், கட்டுரைகள் போன்ற வடிவங்களில் கட்டிடக்கலைக் கோட்பாடுகள் வெளிப்படுகின்றன. பெரும்பாலும் கட்டிடக்கலைக் கோட்பாடு கற்பித்தல் சார்ந்து காணப்படுவதால் பெரும்பாலான கட்டிடக்கலைக் கோட்பாட்டாளர்கள் கட்டிடக்கலைப் பள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவோ அல்லது அங்கேயே பணியாற்றுபவர்களாகவோ உள்ளனர். முகப் பழைய காலத்திலேயே ஏதோ ஒரு வடிவத்தில் கட்டிடக்கலைக் கோட்பாடு இருந்துள்ளது. அச்சுப் பதிப்பு பொதுவான ஒன்றாக மாறிய பின்னர் கட்டிடக்கலைக் கோட்பாடு தொடர்பான செயற்பாடுகள் மேலும் வளம் பெற்றன. இருபதாம் நூற்றாண்டில் நூல்களும், இதழ்களும், ஆய்விதழ்களும், முன்னெப்பொழுதும் இல்லாதவாறு கட்டிடக் கலைஞர்களினதும், திறனாய்வாளர்களினதும் ஆக்கங்களைப் பெருமளவில் வெளியிட்டன. இதனால் முன்னர் நீண்டகாலம் நிலைத்திருந்த பாணிகளும் இயக்கங்களும், விரைவாக உருவாகி விரைவாகவே இல்லாமல் போயின.