மனிதக் கூர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
மாந்தரினப் படிமலர்ச்சி அல்லது மனிதக் கூர்ப்பு (ஆங்கிலம்:Human Evolution) எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஓர் உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ (Homo) பேரினத்தின் படிமலர்ச்சி வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் (Hominids) ஓர் இனமாக ஓமோ சப்பியென்சுகளின் (Homo Sapiens) தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் உடற்சார் மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், கருவியல், மரபியல் என்பன அடங்குகின்றன.[1]
உயர்விலங்கினப் படிமலர்ச்சி, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்திலும் அதாவது 85 மிமு (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும்)விலும், புதைபடிவப் பதிவுகளின்படி பலையோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மிமு விலும், தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.[2][3][3]ஓமினிடே குடும்பம் 15-20 மில்லியன் ஆண்டுகள் முன்பு ஐலோபட்டிடே குடும்பத்திலிருந்து, பிரிந்துபோனது. 14 மிமு அளவில், பொங்கினே, அல்லது ஒராங்குட்டான்களும் ஓமினிடே குடும்பத்தில் இருந்து விலகிச் சென்றன.[4] பின்னர் 5-6 மிமு அளவில் கொரில்லா, சிம்பஞ்சி என்பன ஓமோ பேரினத்தை நோக்கிப் படிமலர்ந்த கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டன. 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஓமினினே, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிறப்பினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் படிமலர்ந்தது.[5][6]
ஓமினினி கூட்டத்தில் (tribe) ஓமோ பேரினத்தின் பல்வேறு இனங்களும், துணை இனங்களும் தோன்றின. ஆனால் இன்று ஒன்று தவிர ஏனையவை முற்றாக அழிந்துவிட்டன அல்லது பிற இனங்களுடன் கலந்துவிட்டன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நிமிர்நிலை மாந்தன் (ஓமோ எரக்டசு) (Homo erectus), ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்ந்த நியாந்திரதால்கள் (ஓமோ நியாந்திரதாலென்சிசு அல்லது ஓமோ சப்பியென்சு நியாந்திரதாலென்சிசு) இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதனின் முன்னோடியான தொடக்கநிலை சாரநிலை மாந்த இனம் (ஓமோ சப்பியென்சு) 400,000 தொடக்கம் 250,000 ஆண்டுகள் முன்னர் வரையிலான காலப் பகுதியில் தோன்றியது. தொடக்க நிலை மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுகளுள் ஓமோ ஐய்டெல்பெர்கென்சிசு, ஓமோ ரொடெசியென்சிசு, ஓமோ நியாந்திரதாலென்சிசு என்பனவும், சில வேளைகளில் ஓமோ அன்ட்டெசெசர், ஓமோ எர்காசுட்டர் என்பனவும் அடங்கும்.[7] உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தொடக்கநிலை சாரநிலை மாந்தர் (ஓமோ சப்பியென்சு) இனத்தில் இருந்து, நடுப் பழையகற்காலத்தில், ஏறத்தாழ 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.[8][8] நடத்தை அடிப்படையிலான தற்கால மனிதர் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினர் என்பது பலருடைய கருத்து. வேறு சிலர், தற்கால மனித நடத்தைகள், உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தோன்றியபோதே உருவாகிவிட்டதாகக் கருதுகின்றனர்[9]
உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்று, நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இதை "அண்மை ஓரிடத் தோற்றக் கருதுகோள்" என்றும் "அண்மைக்கால ஆப்பிரிக்க வெளியேற்றப் படிமம்" என்றும் அழைப்பது உண்டு.[10][11][12] இக் கருதுகோளின்படி சாரநிலை மாந்தர் (ஓமோ சப்பியென்சு) இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் 50,000 - 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஆசியாவில் வாழ்ந்த நிமிர்நிலை மாந்தர் ( ஓமோ இரக்டசு) இனத்தையும், ஐரோப்பாவில் வாழ்ந்த நியாந்திரதால்களையும் பதிலீடு செய்துவிட்டது. இக்கருதுகோளுக்கு மாற்றீடாக பல்லிடத் தோற்றக் கருதுகோள் என்னும் ஒரு கருதுகோளும் உள்ளது. இக்கருதுகோள், நிமிர்நிலை மாந்தர் (ஓமோ இரக்டசு) இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிப் பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததனால் சாரநிலை மாந்தர்(ஓமோ சப்பியென்சு) இனங்கள் பல்வேறு புவியியல் பகுதிகளிலும் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர் என்கிறது. மரபியல் அடிப்படையிலான சில ஆய்வுகளின்படி, ஆப்பிரிக்கரல்லாத மக்களில் நியாந்திரதால்களின் கூறுகள் இருப்பதும், நியாந்திரதால்களும், தெனிசோவா ஓமினின் போன்ற ஓமினிடுகளும் தமது மரபுப்பதிவுகளில் 6% வரையில் தற்கால மனிதருக்கு வழங்கியுள்ளதும் தெரியவருகிறது.[13][14][15]