மொலியர்
From Wikipedia, the free encyclopedia
மொலியர் (Molière) [1] என்பவர் பிரெஞ்சு நாடகாசிரியரும், நடிகருமான யான்-பப்டிசுட்டு போக்யுலின் (Jean-Baptiste Poquelin) (பிறப்பு: ஜனவரி 15, 1622 – இறப்பு: பெப்ரவரி 17, 1673) என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் நகைச்சுவையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார் [2]. மிசாந்திரோப் , மனைவிகளுக்கான பள்ளி தார்த்தூஃபே போன்றவை இவர் எழுதிப் பெயர் பெற்ற நாடகங்களுள் சிலவாகும்.
மொலியர் | |
---|---|
மொலியரின் உருவப்படம் நிக்கோலாஸ் மிக்னார்டால் வரையப்பட்டது. | |
பிறப்பு | யான்-பாப்டிசுட் போகுவெலின் (1622-01-15)சனவரி 15, 1622 பாரிசு, பிரான்சு |
இறப்பு | பெப்ரவரி 17, 1673(1673-02-17) (அகவை 51) பாரிஸ், பிரான்சு |
புனைபெயர் | மொலியர் |
தொழில் | நாடகாசிரியர் |
தேசியம் | பிரான்சியர் |
காலம் | 1645-1673 |
வகை | நகைச்சுவை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தார்த்தூஃபே; மிசாந்திரோப்; படித்த பெண்; மனைவிகளுக்கான பள்ளி |
துணைவர் | ஆர்மண்டே பேசார்டு |
துணைவர் | மடெலீன் பேசார்டு |
வசதி படைத்த குடும்பமொன்றில் பிறந்து இயேசுசபையினரின் கிளெமண்ட் கல்லூரியில் படித்த மொலியர், அரங்கியலில் ஈடுபடுவதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். 13 ஆண்டுகள் பல்வேறிடங்களுக்கும் சென்று நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததனால் இவரது நகைச்சுவைத் திறன் கூர்மையடைந்தது. திருந்திய பிரெஞ்சு நகைச்சுவையுடன் சமயத்துக்கு ஏற்றவாறு பேசி நடிக்கும் நுட்பத்தையும் கலந்து தானே நாடகங்களை எழுதவும் தொடங்கினார் [3].
பிலிப்பே I , 14 ஆம் லூயின் சகோதரர் உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் லூவர் மாளிகையில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாடகங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சால்லே டு பெட்டிட் போர்போன் என்ற பெரிய அரங்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் பாரிசு நகரத்தின் புகழ்மிக்க அரண்மனையான பாலைசு இராயலைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் மொலியருக்குக் கிடைத்தது. இவ்விரு அரங்குகளிலும் மொலியர் அபெக்டேடு லேடீசு, போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நிகழ்த்தினார். இவ்வெற்றியின் மூலமாக மொலியரின் குழுவினருக்கு அரசின் ஓய்வூதியமும் பட்டங்களும் கிடைத்தன. மொலியர் தொடர்ந்து அரசாங்க ஆதரவு பெற்ற நாடக ஆசிரியராக இயங்கினார் [3].
நாடகத்துறையில் மொலியரின் கடின உழைப்பு காரணமாக இவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 1667 ஆம் ஆண்டில் சிறிதுகாலம் மொலியர் நாடக அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது காசநோயால் அவரது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் என்றாலும் பின்னர் அவர் சில மணி நேரங்களுக்கு பின் காலமானார் [3].