வால்வெள்ளி
From Wikipedia, the free encyclopedia
வால்வெள்ளி (comet) பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது கருப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் "வால்" எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாகக் கலந்திருக்கும். வால்வெள்ளியின் கருப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்ளியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் வட்டணை அல்லது சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மீத்தேனும் நீரும் தூசியும் கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை.
வால்வெள்ளிகள் மிகவும் மையம்பிறழ்ந்த நீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வட்டணை அலைவுநேரம் அகன்ற நெடுக்கம் கொண்டதாகும். இந்நெடுக்கம் பல ஆண்டுகளில் இருந்து பல மில்லியன் ஆண்டுகள் வரை அமையும். சிற்றலைவுநேர வால்வெள்ளிகள் நெப்டியூன் வட்டணைக்கு அப்பால் உள்ள கைப்பர்பட்டையில் இருந்து அல்லது அதைச் சார்ந்த சிதறிய வட்டிலில் இருந்து தோன்றுகின்றன. நெட்டலைவுநேர வால்வெள்ளிகள் கைப்பர்பட்டையின் வெளிப்புறத்தில் இருந்து அடுத்த விண்மீனின் பாதி தொலைவு வரை விரிந்தமையும் ஊர்த் முகிலில் இருந்து தோன்றுவதாகக் கருதப்படுகின்றன.[1] இவை ஈர்ப்பு குற்றலைவுகளால் ஊர்த் முகிலில் இருந்து சூரியனை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றன, இந்த குற்றலைவுகள் அருகாமையில் உள்ள கடந்தகால, எதிர்கால, அல்லது கடந்துசெல்லும் விண்மீன்களால் உருவாக்கப்படுகின்றன. மீவலைய வால்வெள்ளிகள் உடுக்கன இடைவெளிக்குள் பரந்துபோகும் முன் உட்புறச் சூரியக் குடும்பத்தின் ஊடாகக் கடக்கலாம். அலைவுநேர வால்வெள்ளியின் தோற்றம் வால்வெள்ளியின் மீட்சி எனப்படுகிறது.
சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர்ம, வளிம நிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு எடுத்துகாட்டு ஆல்லே வால்வெள்ளி ஆகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை நோக்கலாம்/அவதானிக்கலாம்.
விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீத்தேன், சயனோஜன், கரியமில வளிமம், அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடுகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும்போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால்வெள்ளிகளின் மேற்பரப்பு படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விழும்..[2] குறுங்கோள்கள் வால்வெள்ளிகளைப் போல வெளிப்புறச் சூரியக் குடும்பத்துக்குள் தோன்றாமல், வியாழனின் வட்டணைக்கும் உள்ளே அமைந்த பகுதியில் தோன்றுகின்றன.[3][4] முதன்மைப்பட்டை வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பும் முனைப்பான செண்டார் வகை சிறுகோள்களின் கண்டுபிடிப்பும் குறுங்கோளுக்கும் வால்வெள்ளிகளுக்கும் இடையில் அமைந்த வேறுபாட்டை மழுங்கடித்து விட்டன.
2014 நவம்பர் மாதம் வரை 5,253 வால்வெள்ளிகள் அறியப்பட்டுள்ளன.[5] இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. வாய்ப்புள்ள மொத்த வால்வெள்ளிகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய திரளேயாகும். வெளிப்புறச் சூரியக் குடும்பத்தில் (ஊர்த் முகிலில்) வால்வெள்ளிபோன்ற வான்பொருள்கள் டிரில்லியன் அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன.[6][7] ஓராண்டில் ஒரு வால்வெள்ளி கண்ணுக்குப் புலப்படுகிறது. பல மங்கிய வால்வெள்ளிகள் நமக்குப் புலப்படுவதில்லை.[8] இவற்றில் பொலிவுமிக்கவை "பெருவால்வெள்ளிகள்" எனப்படுகின்றன. வால்வெள்ளிகளைப் பல ஆளில்லாத விண்கலங்கள் சென்று ஆய்ந்துவருகின்றன. எடுத்துகாட்டாக, ஐரோப்பிய முகமையின் உரோசெட்டா திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் தான் முதன்முதலில் மனிந்திர விண்கலத்தை ஒரு வால்வெள்ளிக்கு அனுப்பியது.[9] நாசாவின் ஆழ்மொத்தல் விண்கலம் தெம்பெல் 1 வால்வெள்ளியில் உள்ள குழிப்பள்ளத்தை உட்புறக் கூறுபாட்டு ஆராய்ச்சிக்காக தகர்த்தது.