வித்து உறங்குநிலை
From Wikipedia, the free encyclopedia
வித்து உறங்குநிலை அல்லது விதை உறக்கம் (Seed Dormancy) என்பது தாவர விதை அல்லது வித்தானது முளைப்பதற்கு ஏற்ற உகந்த சூழல்காரணிகள் இருக்கும் நிலையிலும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு வித்து முளைத்தலைத் தடுக்கக் கூடிய ஒரு நிலைமையாகும்[1]. உறங்குநிலையில் இல்லாத உயிர் வித்துக்கள் உகந்த வெப்பநிலை, நீர், ஆக்சிசன், தேவையேற்படின் ஒளி அல்லது இருள் போன்றன கிடைக்கும் சூழ்நிலையில் முளைக்க ஆரம்பிக்கும். ஆனால் உறங்கு நிலையிலுள்ள வித்துக்கள் இவ்வாறான உகந்த சூழ்நிலையிலும் முளைப்பதில்லை. அவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னரே தகுந்த சூழல் கிடைத்தால் முளைக்கும். வித்து முளைத்தல் மூலம் உருவாகும் நாற்றானது தொடர்ந்து உயிர்வாழ்தலுக்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும் நிலையைத் தவிர்க்க தாவரங்களால் கையாளப்படும் ஒரு பொறிமுறையே உறங்குநிலையாகும்[2].
இந்த உறங்குநிலை மூலம் முளைத்தல் தள்ளிப்போடப்படுவதால், வித்துக்கள் ஓரிடத்திலிருந்து, வேறோர் இடத்திற்கு பரவுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏனைய தாவரங்களுடன் ஒளி, நீருக்கான போட்டி குறைவான நேரத்தில், அவை முளைத்தலை மேற்கொள்ளவும் இந்த உறங்குநிலை உதவும். பல விதைகள் பல மாதங்களுக்கோ அல்லது ஆண்டுகளுக்கோ உறங்குநிலையில் இருக்கும் தன்மை கொண்டனவாக இருக்கின்றன. 1000 ஆண்டுகள் வரைகூட விதைகள் வாழும்திறன் கொண்டனவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன[3]. நீண்டகாலத்தைப் பொறுத்தளவில், விதை எக்காலத்தில் இருந்து உறங்குநிலையில் இருந்திருக்கிறது என்பதனைக் கணிக்க கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பயன்படுகின்றது. 2008 இல் வெளிவந்த அறிக்கை ஒன்றின்படி, கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையினால் காலம் கணிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் உறங்குநிலையில் இருந்து, தனது வாழ்திறனைத் தக்க வைத்துக் கொண்ட பேரீச்சை வித்து ஒன்றே ஆவணப்படுத்தப்பட்ட நீண்டகால உறங்குநிலை கொண்ட வித்தாகக் கருதப்படுகின்றது[4]. இந்த பேரீச்சை விதையானது 2005 ஆம் ஆண்டில் முளைவிட்டு, அறிக்கை வெளிவந்த 2008 ஆம் ஆண்டில் 4 அடி உயரமுள்ள, 3 வயதுடைய மரமாக இருந்திருக்கின்றது.