விலங்குரிமை
From Wikipedia, the free encyclopedia
விலங்குரிமை (ஆங்கிலம்: Animal rights) என்பது அனைத்து வலியுணர் விலங்குகளும் மனிதப் பயன்பாட்டுக்கு உட்படாமலிருக்கும் தார்மீக சுயமதிப்பையும் சுதந்திரத்தையும் கொண்டவை என்றும் துன்பத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய அடிப்படை உரிமையைக் கொண்டவை என்றும் மனிதர்களுக்கிணையாக வாழ்வின் அடிப்படை நலத்தேவைகளைப் பெறும் உரிமையைக் கொண்டவை என்றும் கூறும் மெய்யியல் ஆகும்.[1] பொதுவாகக் கூறின், உலகவழக்கில் "விலங்குரிமை" என்னும் சொல் "விலங்கினப் பாதுகாப்பு" என்றும் "விலங்கின விடுதலை" என்றும் கொள்ளப்படுகிறது. சுருங்கக் கூறின், தனிமனிதனுக்குத் தரப்படும் வாழத் தேவையான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் – அஃதாவது எக்காரணத்தைக் கொண்டும் விலக்கில்லாத வாழுரிமை, சுதந்திரம், வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை முதலியன – அனைத்து உணர்வுள்ள விலங்குகளுக்கும் நல்கப்பட வேண்டும் என்பதாகும்.[2]
ஒரு விலங்கின் இனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அந்த இன விலங்குக்கு தார்மீக உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுவதை அறிஞர்களும் விலங்குரிமை ஆர்வலர்களும் எதிர்க்கின்றனர். இதை அவர்கள் விலங்கினவாதம் என்று அழைக்கின்றனர். இச்சொல் 1970-ம் ஆண்டு ரிச்சர்ட் டி. ரைடர் என்ற அறிஞரால் முதலில் பயன்படுத்தப்பட்டது.[3] விலங்கினவாதம் என்பது மற்ற ஓரவஞ்சனைகளைப் போலப் பகுத்தறிவற்ற பிழைபட்ட சிந்தனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[4] விலங்குகள் இனியும் ஒரு பயன்பாட்டுப் பொருட்களாகப் பார்க்கப்படக்கூடாது என்றும் உணவு, உடை, அறிவியல் ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, பொதிசுமத்தல் என எதற்காகவும் விலங்குகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர்கள் உரைக்கின்றனர்.[5] ஜைனம், தாவோயிசம், இந்து மதம், பௌத்தம், ஷின்டோயிசம், ஆனிமிசம் (இயற்கை வழிபாடு) போன்ற உலகெங்கிலும் உள்ள பல கலாச்சார மரபுகள் பல வகைகளில் விலங்குரிமையை ஆதரிக்கின்றன.
தார்மீக உரிமைகள் பற்றிய விவாதத்திற்கு இணையாக, வட அமெரிக்காவில் உள்ள சட்டப் பள்ளிகள் இப்போது விலங்குச் சட்டத்தைக் கற்பிக்கின்றன.[6] ஸ்டீவன் எம். வைஸ், கேரி எல். பிரான்சியோனி போன்ற பல சட்ட அறிஞர்கள் மனிதர்களுக்கு இருக்கும் சட்டபூர்வமான அடிப்படை உரிமைகளும் தனிநபர் அந்தஸ்தும் விலங்குகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டுமென்ற விரிவாக்கத்தை ஆதரிக்கின்றனர். மனிதனை ஒத்த ஹோமினிட்களே இதுவரை இதுபோன்ற விவாதங்களில் பெரும்பாலும் சுட்டப்பட்டு வந்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவ்வாதங்கள் அவ்விலங்குகளின் வலியுணர்த் தன்மையைக் கருத்திற்கொள்ளாது அவற்றின் அறிவுத்திறனை மட்டுமே மையப்படுத்தி அதன் அடிப்படையில் அவற்றின் உரிமைகளைத் தீர்மானிக்க முயல்வதுதான் என்பதால் தற்கால அறிஞர்கள் இதைத் தவறென்று கூறுகின்றனர்.[7] நவம்பர் 2019 நிலவரப்படி, உலகில் 29 நாடுகள் ஹோமினாய்டுகளின் மீது பரிசோதனை செய்வதற்குத் தடை விதித்துள்ளன. அர்ஜென்டினா 2014 முதல் சிறைபிடிக்கப்பட்ட ஒராங்குட்டான்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.[8]
முதனி வரிசையைச் சார்ந்த விலங்குகளுக்கு அடுத்தபடியாக பாலூட்டிகள்தான் விலங்குரிமை விவாதங்கள் பெரும்பாலும் பேசப்பட்டு வந்துள்ளன. மற்ற விலங்குகள் குறைவான உணர்வுள்ளவையாகக் கருதப்பட்டு கருத்தில் கொள்ளப்படாமலே இருந்து வந்துள்ளன. சமண மதத்தில் பூச்சிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் மற்ற இடங்களில் ஒப்பீட்டளவில் அவை சிறிய அளவில் மட்டுமே பேசப்பட்டு வந்துள்ளன.[9]