அர்பில்
ஈராக்கிய குர்திசு பிராந்தியத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
அர்பில் அல்லது எர்பில் (Erbil, also known as Hewler) (குர்தியம்: Hewlêr, வார்ப்புரு:Lang-ckb; அரபு மொழி: أربيل Arbīl) என்பது ஈராக்கிய குர்திஸ்தானின் தலைநகரமாகும். பகுதாதுவிற்கு வடமேற்காக இது அமைந்துள்ளது. 2011இன் மதிப்பீட்டின் அடிப்படையில் தற்கால ஈராக் நாட்டின் மேல் மெசொப்பொத்தேமியாவில் உள்ள அர்பில் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1.61 மில்லியன் ஆகும்.[1] மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாக அர்பில் நகரம் விளங்குகிறது. பண்டைய அர்பில் நகரத்தில் மனிதக் குடியிருப்புகள் கிமு 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது.[2]
அர்பில்
ھەولێر எர்பில் | |
---|---|
நாடு | ஈராக் |
பகுதி | ஈராக்கிய குர்திஸ்தான் |
மாகாணம் | அர்பில் மாகாணம் |
அரசு | |
• ஆளுநர் | நவ்சாட் கட்டி |
ஏற்றம் | 420 m (1,380 ft) |
மக்கள்தொகை (2013 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 1.5 மில்லியன் |
நேர வலயம் | UTC+3 |
• கோடை (பசேநே) | not observed |
அர்பில் நகரத்தின் மையத்தில் பண்டைய அரண்மனை உள்ளது. சுமேரியாவின் மூன்றாவது ஊர் வம்ச மன்னர் சுல்க்கி என்பவர் (கிமு 2094 – கிமு 2047) இந்நகரத்தைப் பற்றி குறித்துள்ளார். இந்நகரத்தைப் பின்னர் பழைய அசிரியப் பேரரசினர் (கிமு 2025 -–கிமு 1378) கைப்பற்றினர்.[3][4]
கிமு 21-ஆம் நூற்றாண்டிலிருந்து, கிமு 7-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, அசிரியப் பேரரசின் முக்கிய நகரமாக அர்பில் நகரம் இருந்தது. அசிரிய வரலாற்றுப் பதிவேடுகளின் படி, கிமு எழாம் நூற்றாண்டில் இறுதியில் இந்நகரத்தை குடியன்கள் கைப்பற்றி ஆண்டனர். குடியன்களுக்குப் பின்னர் கிமு எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்நகரம் புது பாபிலோனியப் பேரரசின் (கிமு 626 - 539) கீழ் சென்றது. பின்னர் அர்பில் நகரம் மீடியாப் பேரரசு, அகாமனிசியப் பேரரசு, கிரேக்கப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு, சாசானியப் பேரரசுகளின் கீழ் இருந்தது. கிபி எழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய மதம் தோன்றி வளர்ந்த போது, உமையா கலீபகத்தின் கீழ் சென்றது. பின்னர் செல்யூக் பேரரசு (1037–1194) மற்றும் துருக்கிய உதுமானியப் பேரரசின் (1299–1922) கீழ் சென்றது.[5]
பண்டைய அண்மை கிழக்கு நகரத் தொல்லியல் மேடுகளில் கண்டெடுத்த தொல் பொருட்கள் அர்பில் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது. சூலை 2014-இல் அர்பில் நகரத்து பண்டைய அரண்மனையை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈராக்கிய குர்திஸ்தான் தலைமையிடமான அர்பில் நகரத்தில் குர்து மக்கள், அசிரிய மக்கள், இராக்கிய துருக்கியர்கள், இராக்கிய அரபுகள், யாசிதி மக்கள் மற்றும் ஆர்மீனியர்கள் வாழ்கின்றனர். மேலும் சன்னி முஸ்லீம்கள், சியா முஸ்லீம்கள், கிறித்தவர்கள், யாசிதிகள் வாழ்கின்றனர்.
அன்பு, காதல், அழகு, செழிப்பு, போர் மற்றும் வீரத்திற்கு அடையாளமான சுமேரியக் கடவுளான இஷ்தர் பெண் தேவதையின் வழிபாட்டு மையமாக அர்பில் நகரம் விளங்கியது.[6] தற்போது குர்து மக்கள் இந்நகரத்தை Hewlêr என்று அழைக்கின்றனர்.