இயற்பியல்
பருப்பொருளின் இயல்பு மற்றும் ஆற்றல் பற்றி ஆராய்ச்சி கல்வியின் மூலம் கற்பது. / From Wikipedia, the free encyclopedia
இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்: φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும்.[1][2] விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.[3][4][5]
மிகப்பழமையான கல்வித் துறைகளுள் ஒன்று இயற்பியல் ஆகும்; வானியலையும் உள்ளடக்குவதால் மிகப் பழமையான தென்றே கூறலாம்.[6] கடந்த இரு ஆயிரவாண்டுகளாக வேதியியல், கணிதத்தின் சில கூறுகள், மற்றும் உயிரியலுடன் இயல் மெய்யியலின் பகுதியாக இயற்பியலும் உள்ளது. இருப்பினும் 17ஆம் நூற்றாண்டு அறிவியல் புரட்சிக்குப் பின்னர் இயற்கை அறிவியல் தனித்தன்மையுடன் தங்களுக்கே உரித்தான ஆய்வுநெறிகளுடன் வளர்ந்துள்ளது.[7]
இயற்பியல் தேற்றக்கொள்கைகளை உடைய அறிவியல் மட்டுமன்று; ஓர் சோதனைமுறை அறிவியலும் ஆகும். இயற்பியல் அறிமுறை கொள்கைகளை, பிற அறிவியல் கொள்கைகளைப்போன்றே, சோதனைகள் மூலம் சரிபார்க்க இயலும்; அதேபோன்று அறிமுறைக் கொள்கைகளும் பின்னாளில் நடத்தப்படக்கூடிய சோதனைகளின் விளைவுகளை முன்னதாக கணிக்க கூடியன. இயற்பியல் உயிரி இயற்பியல், குவைய வேதியியல் என பல்வேறு துறையிடை ஆய்வுப்பகுதிகளிலும் பங்கேற்பதால் இயற்பியலின் எல்லைகள் இவையென வரையறுப்பது இயலாததாக உள்ளது. இயற்பியலின் பல புதிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலான நேரங்களில் மற்ற அறிவியல் துறைகளில் அடிப்படை இயக்குவிசைகளை விளக்குவதாகவும் புதிய ஆய்வுப்பகுதிகளைத் திறப்பதாகவும் உள்ளது.
இயற்பியல் அறிமுறைக்கொள்கை முன்னேற்றங்கள் புதிய தொழினுட்பங்கள் உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. காட்டாக, மின்காந்தவியல் அல்லது அணுக்கருவியல் குறித்த கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வில் நேரடியாக மாற்றம் ஏற்படுத்திய தொலைக்காட்சி, கணினிகள், வீட்டுக் கருவிகள், மற்றும் அணு குண்டுகள் போன்ற கருவிகள் உருவாக்கத்திற்கு காரணமாயின; வெப்ப இயக்கவியல் ஆய்வுகளால் தொழில்மயமானது; விசையியல் முன்னேற்றங்கள் நுண்கணித வளர்ச்சிக்கு வித்தானது.
இயற்கை நிகழ்வுகளை திருத்தமாகவும் உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகளால் எண்ணவியலா எல்லைகளை இது எட்டியுள்ளது; தற்போதைய அறிவுப்படி, அணுவினும் மிகச்சிறிய நுண்துகள்களைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவிலுள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் எவ்வாறு நமது பேரண்டம் உருவாகியிருக்கலாம் என்றும் இயற்பியல் விவரிக்கிறது. இந்த மாபெரும் கற்கை டெமோக்கிரட்டிசு, எரடோசுதெனீசு, அரிசுட்டாட்டில் போன்ற மெய்யியலாளர்களிடம் துவங்கி கலீலியோ கலிலி, ஐசாக் நியூட்டன், லியோனார்டு ஆய்லர், ஜோசப் லூயி லாக்ராஞ்சி, மைக்கேல் பரடே, ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்சு போர், மேக்ஸ் பிளாங்க், வெர்னர் ஐசன்பர்க், பால் டிராக், ரிச்சர்டு ஃபெயின்மான், ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற இயற்பியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.