இரட்டை சிறுகோள் திசைமாற்றச் சோதனை
அமெரிக்க விண்வெளித் திட்டம் / From Wikipedia, the free encyclopedia
இரட்டை சிறுகோள் திசைமாற்றச் சோதனை (Double Asteroid Redirection Test) என்பது ஒரு விண்கலனை பயன்படுத்தி விண்ணில் உள்ள விண்கல் மீது மோதவைத்து அதனை திசைதிருப்ப மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும். பூமிக்கு அருகில் உள்ள பொருட்களுக்கு எதிராக கிரக பாதுகாப்பு முறையைச் சோதிப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தை சுருக்கமாக டார்ட் திட்டம் என்று அழைக்கிறர்கள்.[1] பூமியை நோக்கி வரும் விண்கற்கள் அல்லது சிறுகோள்களிடம் இருந்து எவ்வாறு பூமியை பாதுகாத்துக் கொள்வது என்பதை இலக்காகக் கொண்டு இச்சோதனை திட்டமிடப்பட்டது. உந்தப் பரிமாற்றத்தின் மூலம் ஒரு சிறுகோளை திசைதிருப்ப ஒரு விண்கலத்தின் தாக்கத்தின் திறனை மதிப்பிடுவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.[2]
மனித குலத்தின் கிரக பாதுகாப்புக்கான ஆய்வை தொடர்ந்து சிந்தித்து வரும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் 2022 ஆம் ஆண்டு இத்தகைய சோதனை ஒன்றை நிகழ்த்தியது. விண்வெளியில் இருந்து நாம் வாழும் பூமிக்கு அருகே வரும் விண்கல் ஒன்றினை தான் வடிவமைத்துள்ள சிறப்பு விண்கலம் ஒன்றை மோத வைத்து விண்கல்லின் பாதையை மாற்ற இந்நிறுவனம் முயற்சித்தது. இந்த ஆய்வுக்கு டார்ட் விண்கலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூமியிலிருந்து இந்த ஆய்வு விண்கலமான டார்ட் விண்ணில் ஏவப்பட்டது. சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகோள் பூமிக்கு உண்மையான அச்சுறுத்தல் எதையும் ஏற்படுத்தவில்லை. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிமோசு என்ற சிறுகோளின் சிறு துணை கோளான டிமோர்பசு மீது இவ்விண்கலம் வெற்றிகரமாக மோதியது.[3][4][5]