இரைப்பை அழற்சி
From Wikipedia, the free encyclopedia
இரைப்பையழற்சி அல்லது இரையகவழல் (Gastritis) என்பது இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைவதைக் குறிக்கின்றது[1]. அதிகப்படியான மது அருந்துதல், இஸ்டீராய்டற்ற அழற்சிக்கெதிரான மருந்துகளான (NSAIDs) ஆஸ்பிரின், ஐபுரூஃபென் ஆகியவற்றைத் தொடர்ந்து உபயோகப்படுத்துதல் ஆகியவை முதன்மையான தீவிரக் காரணங்களாக உள்ளன. சிலவேளைகளில் பெரிய அறுவைச் சிகிச்சை, புறவழிக் காயங்கள், தீக்காயங்கள், கடுமையான கிருமித் தொற்றுகளும் இரைப்பையழற்சி உருவாகக் காரணங்களாகின்றன. உடற்பருமனைக் குறைக்க மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சையின்போது நிகழும் சீரமைக்கப்பட்ட செரிமானக் குழாயாலும் இரைப்பையழற்சி உருவாகலாம். நாட்பட்டக் காரணங்களாகப் பாக்டீரியா, முதன்மையாக எலிக்கோபேக்டர் பைலோரி கிருமித்தொற்று, பித்தநீர் பின்னொழுக்கு (bile reflux), உளைச்சல் ஆகியவற்றைக் கூறலாம். சில தன்னெதிர்ப்பு பிறழ்வுகளும் இரைப்பையழற்சியினை உருவாக்கலாம். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளாகும். செரிக்க இயலாமை (அஜீரணம்), வயிற்று உப்புசம், குமட்டுதல், வாந்தி, இரத்தச்சோகை ஆகியவை பிற அறிகுறிகளாகும். சிலருக்கு மேல்வயிற்றில் எரிச்சல், நிரம்பிய உணர்வு இருக்கலாம்[2][3]. இரைப்பை அகநோக்கிச் சோதனை (gastroscopy), இரத்தப் பரிசோதனை, முழுமையான குருதி எண்ணிக்கைச் சோதனை அல்லது மலப் பரிசோதனை இரைப்பையழற்சியினைக் கண்டறியப் பயன்படுத்தலாம்[4]. அமில எதிர்ப்பிகள், புரோட்டான் ஏற்றித் தடுப்பிகளைப் போன்ற மருந்துகள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள், காரமான உணவுகளைத் தவிர்த்தல் ஆகியவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இரத்தச் சோகை உள்ளவர்களுக்குப் பி12 ஊசி மருந்துகள் கொடுக்கப்படுகிறது என்றாலும், பொதுவாகச் சாப்பிடக்கூடிய பி-12 துணை உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன[5].