உணர்திறன்
From Wikipedia, the free encyclopedia
உணர்திறன் (sentience) என்பது உணர்வுகளை அனுபவிக்கும் திறன் ஆகும்.[1] மேற்கத்திய மெய்யியலில் "சென்ஷியன்ஸ்" என்றழைக்கப்படும் இச்சொல் "உணர்வு" என்று பொருட்படும் சென்டியன்டெம் என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.[2] இச்சொல் முதன்முதலில் 1630-களில் மெய்யியல் அறிஞர்களால் உணரும் திறனை அறிவுத்திறனிலிருந்து வேறுபடுத்த வேண்டி உருவாக்கப்பட்டது. நவீன மேற்கத்திய மெய்யியலில் இச்சொல் உணர்வுகளை உணரும் தன்மையைக் குறிக்கிறது. ஆசிய மதங்களில் உணர்த்திறன் என்ற சொல் பல்வேறு கருத்துகளைப் பிரதிபலிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் புனைக்கதைகளில், உணர்த்திறன் என்ற சொல் சில சமயங்களில் "அறிதல்", "சுயவுணர்வு", "உணர்வுநிலை" போன்ற சொற்களுடன் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகிறது.[3]
சில எழுத்தாளர்கள் வெறும் ஒளி, வலி போன்ற உணர்வுகளை உணரும் திறனிலிருந்து காதல், துன்பம் போன்ற உணர்ச்சிகளை உணரும் திறனை வேறுபடுத்திக் காட்ட இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய மெய்யியலில் சுயநினைவுள்ள ஒரு தனிநபரின் அகநிலை விழிப்புணர்வு அனுபவங்கள் தன்மையங்கள் (qualia) என அழைக்கப்படுகிறது.[3]
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 7 ஜூலை 2012 அன்று பொதுவில் அறிவிக்கப்பட்ட "கேம்பிரிட்ஜ் உணர்வுநிலைப் பிரகடனத்தின்படி" நனவு என்பது சிறப்பு நரம்பியல் கட்டமைப்புகளின்—முக்கியமாக நரம்பு-உடற்கூற்றியல், நரம்பு-வேதியியல், நரம்பு-உடலியங்கியல் போன்ற அடி மூலக்கூறுகளின்—செயற்பாட்டால் உருவாவது ஆகும். இது நன்கு பரிணமித்த உயிரினங்களில் மைய நரம்பு மண்டலமாக வெளிப்பட்டு நனவை உருவாக்குகிறது. அதன்படி, இந்த அடி மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் மட்டுமே உணர்வுநிலை கொண்டவை ஆகும். இவ்வுயிரிணங்கள் அனைத்துமே விலங்குத் திணையில் உள்ளவை ஆகும். விலங்குத் திணையில் கடற்பாசிகள், பிளாக்கோசோவன்கள், மீசோசோவன்கள் ஆகிய மூன்று மட்டும் இதற்கு விதிவிலக்கு; இவை மூன்றும் எளிமையான உடலமைப்பைக் கொண்டவையாகவும் நரம்பு மண்டலம் இல்லாதவையாகவும் இருப்பதால் இவை விலங்குத் திணையைச் சேர்ந்த உயிரினங்களாக இருந்தாலும் உணர்வுநிலையில்லாத ஒரே விலங்குகளாகத் திகழ்கின்றன.[4]