எழுத்தறிவு
From Wikipedia, the free encyclopedia
எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு[1] ஆகியவற்றின்தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.[2] பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.
வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.
எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று வாசித்தல் ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்:
- பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளல்
- எழுதப்பட்டவற்றை குறி நீக்கி புரிந்து கொள்ளல்
- உரைகளைப் படித்து உள்ளார்ந்து புரிந்துகொண்டு உச்ச அளவு பயன்பாடு பெறுதல்
- வாசித்தலில் உள்ள வளர்ச்சிகள் பின்வரும் பலக்கிய மொழியியல் கூறுகளை உள்ளடக்கியதாகும்:
- பேச்சில் உள்ள ஒலிக்குறிகள் குறித்த விழிப்புணர்வு (ஒலியனியல்)
- எழுத்துக்கோர்வை வடிவவிதம் (orthography)
- வார்த்தைகளுக்கான பொருளறிதல் (சொற்பொருளியல்)
- இலக்கணம் (சொற்றொடரியல்)
- வார்த்தை உருவாதலில் வடிவவிதம் (உருபனியல்)
- இவை அனைத்தும் தடையற்ற ஆற்றொழுக்கு வாசித்தலுக்கும் புரிதலுக்கும் தேவையான அடிப்படை கூறுகளாகும்.
இத்திறன்களைப் பெற்றவர், அச்சிடப்பட்ட கருத்துகளைப் புரிந்து, நுண்ணாய்வு செய்து பயன் பெறுதல், தொகுத்தல், உய்த்துணர்தல், கோர்வையாகவும், துல்லியமாகவும் எழுதுதல், அச்சிடப்பட்ட கருத்துகளிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி உட்காட்சி அமைத்தல், முடிவெடுத்தல், படைப்புத்திற ஆதார சிந்தனைகள் மேற்கொள்ளல் போன்ற பன்முகத் திறன்களையும் பெற்றவராவர். இவர்களே முழு எழுத்தறிவு பெற்றவராவர்.[3]
இவற்றைப் பெற இயலாதோர் எழுத்தறிவற்றோர் அல்லது எழுத்து அறியாதோர் எனப்படுவர்.[சான்று தேவை]
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் எழுத்தறிவை பின்வருமாறு வரையறுத்துள்ளது: எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கருவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு, அண்மைச்சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும்[4]