ஒய்யாரம்
From Wikipedia, the free encyclopedia
ஒய்யாரம் (Fashion) என்பது மக்களால் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வரும் பிரபலமான ஆடை வடிவமைப்பு அல்லது பிரபலமான ஆடையணியும் பாணியாகும். புதுப்பாங்கு என்று ஒய்யாரத்திற்கு இணையாக அழைக்கப்படும் இந்நடைமுறை குறிப்பாக ஆடை, காலணி, ஆபரணங்கள், ஒப்பனை அல்லது உடலை அலங்கரித்துக் கொள்ளும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும், ஒய்யாரம் என்பது தனித்துவமானதும் ஆடை உடுத்திக் கொள்வதில் பெரும்பாலும் அடிக்கடி மாறாத போக்கும் கொண்டதாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சூழலிலும் பிரபலமாக இருக்கும் உடை வகைகள், கட்டிட அமைப்புகள், ஓவியப் பாணிகள், அலங்காரப் போக்குகள், இசை வடிவங்கள், விருந்தோம்பல் முறைகள் ஆகியன ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்பட்டன. பின்னர் ஒய்யாரம் கால சூழல்களுக்கேற்ப மாறி அமைகின்றது. புதிய ஒய்யார வடிவங்களும் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
நடைமுறையில் உள்ள பாங்குகள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் புதிய படைப்புகளும் ஒய்யாரம் என்ற சொல்லில் உள்ளடங்கும் [1]. மேலும் ஒய்யாரம் என்ற சொல்லுடன் ஆடையலங்காரம் என்ற தொழில்நுட்ப ரீதியான சொல் இணைக்கப்பட்டுள்ளதால் ஒய்யாரம் என்ற சொல்லின் பயன்பாடு ஆடம்பரமான ஆடை அலங்காரம் அல்லது முகமுடி அணிந்த உடை என்பது போன்ற சிறப்புப் பொருளைப் பெறுகிறது. எனவே ஒய்யாரம் என்பது பொதுவாக ஆடை அலங்காரத்தையும் அதைப்பற்றிய ஆய்வினையும் குறிப்பதாக அமைகிறது. பெண் அல்லது ஆண்களுக்கான ஆடையலங்காரப் போக்குகள் ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. சில சமயங்களில் பால்வேறுபாடற்ற ஆண்பெண் ஆடையலங்காரமும் இதில் இடம்பெறுகிறது [2][3].