கைரேகை
From Wikipedia, the free encyclopedia
கைரேகை' (Fingerprint) என்பது ஒரு மனித விரலின் மேல் தோலுக்கும் அதற்கு அடியில் கீழடுக்காகவுள்ள திசுக்களுக்கும் இடையில் உள்ள முகடுகளைக் குறிக்கிறது. மனிதர்களின் கைகள் புழங்கும் இடங்களில் விட்டுச் செல்லும் தடயம் எனவும் இது அறியப்படுகிறது. இவ்வாறு விட்டுச் செல்லப்பட்ட கைரேகை தடயங்களை மீட்டெடுப்பது தடய அறிவியலின் ஒரு முக்கியமான செயல் முறையாகும். ஒரு விரலின் மேலிருக்கும் ஈரப்பதம் மற்றும் எண்ணெய்ப் பசை காரணமாக கண்ணாடி அல்லது உலோகம் போன்ற மேற்பரப்புகளில் கைரேகைகள் உருவாகின்றன. தோலில் உள்ள உராய்வு முகடுகளின் உச்சிகளை காகிதம் போன்ற மென்மையான மேற்பரப்பிற்கு மாற்றப்படுவது கைரேகை பதிவெடுத்தல் எனப்படும். மை அல்லது பிற பொருட்களை பயன்படுத்தி முழுமையான கைரேகையையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். கைரேகை பதிவுகள் பொதுவாக விரல் மற்றும் கட்டைவிரலின் கடைசி இணைப்புத் திண்டின் பதிவுகளை கொண்டிருந்தாலே போதுமானது. இருப்பினும் கைரேகை அட்டைகளில் பொதுவாக விரல்களின் கீழ் மூட்டு பகுதிகளையும் சேர்த்து பதிவு செய்கிறார்கள்.
மனித கைரேகைகள் விரிவானவையாகும். கிட்டத்தட்ட இவை தனித்துவமானவையாகவும் உள்ளன. ஒரு நபரின் வாழ்க்கையில் நீடித்தவை, அவை மனித அடையாளத்தின் நீண்டகால குறிப்பான்களாக இருக்கப் பொருத்தமானவை மற்றும் மனிதன் இறக்கும்வரை மாற்றவே முடியாத அடையாளம் இதுவென்று கூறலாம். தங்கள் அடையாளத்தை மறைக்க விரும்பும் நபர்களை அடையாளம் காணவும் அல்லது இயலாமையால் ஆற்றலை முற்றிலும் இழந்திருக்கின்ற அல்லது இறந்த நபர்களை அடையாளம் காணவும், அல்லது ஓர் இயற்கை பேரழிவினால் பாதிக்கப்பட்டு அடையாளம் காண முடியாமல் தவிப்பவர்களை அடையாளம் காணவும் காவல்துறையினர் அல்லது பிற அதிகாரிகளால் கைரேகை பதிவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.