தாலமி வம்சம்
From Wikipedia, the free encyclopedia
தாலமி வம்சம் (Ptolemaic dynasty) (ஆட்சிக் காலம்:கிமு 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரணமாக கிரேக்கப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் உள்ளிட்ட தாலமி பேரரசுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. கிமு இரண்டாம் பத்தாண்டுகளில் எழுச்சியுற்ற உரோமைப் பேரரசு காலத்தில், தாலமி வம்சத்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கானான், சைப்பிரஸ், அசிரியா போன்ற பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள் உரோமைப் பேரரசின் கீழ் சென்றது.
தாலமி வம்சம் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாடு | தாலமி பேரரசு | |||||||||||||
விருதுப் பெயர்கள் | பார்வோன் | |||||||||||||
நிறுவிய ஆண்டு | கிமு 305 | |||||||||||||
நிறுவனர் | தாலமி சோத்தர் | |||||||||||||
இறுதி ஆட்சியர் | பதினைந்தாம் தாலமி (எகிப்து), ஏழாம் கிளியோபாட்ரா (எகிப்து) கிமு 30 | |||||||||||||
இனம் | கிரேக்கர்கள் |
இவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினைந்தாம் தாலமி மற்றும் அவரது அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. தாலமி பேரரசின் எகிப்து, உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய 275 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர்.
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டைய எகிப்திய பார்வோன்களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டிக் கொண்டனர்.
பண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரியைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். எகிப்தை ஆண்ட பெண் அரசிகளில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா, ஆட்செப்சுட்டு நெஃபர்டீட்டீ மற்றும் நெபர்தரி ஆவர்.
கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். மேலும் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது குழந்தை மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, சிசேரியனின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டார்.
பின்னர் உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். இதனால் கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் தாலமி பேரரசை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.