நோய்க்காரணி
From Wikipedia, the free encyclopedia
நோய்க்காரணி (Pathogen) அல்லது தொற்றுநோய்க்காரணி அல்லது கிருமி எனப்படுவது, வேறொரு உயிரினத்தின் உள்ளே சென்று, அங்கே வாழ்ந்து, அவ்வுயிரினத்தின் சாதாரண இயக்கத்தை பாதிக்கவல்ல, அல்லது மாற்றவல்ல, அல்லது உபாதைகளைத் தோற்றுவிக்கவல்ல ஒரு உயிரியல் காரணியாகும்[1][2]. ஒரு நோய்க்காரணியானது பல்வேறுபட்ட வழிமுறைகளில் தான் வாழும் விருந்துவழங்கி அல்லது ஓம்புயிரின் அல்லது விருந்து வழங்கியின் (host) உள்ளே சென்று, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும்.
பொதுவான பல நோய்க்காரணிகளுக்கு எதிராக இயற்கையாகவே இயங்கி தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடலில் பலவகையான பாதுகாப்பு தொழில் முறைகள் காணப்படும். மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை (immune system), மற்றும் உடலிற்கு ஊறுவிளைவிக்கும் நோய்க்காரணிகளுக்கு எதிராக தொழிற்படவல்ல, சாதாரணமாக உடலில் காணப்படும் தாவரவளம் (normal flora) போன்றன பாதுகாப்பை ஏற்படுத்தவல்லன. ஆனாலும், இப்பாதுகாப்பையும் மீறி, வீரியமுள்ள நோய்க்காரணிகள் நோய்களை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கையில், நோய் உண்டாதல் தவிர்க்க முடியாமல் போகின்றது. நோய் எதிர்ப்பாற்றல் முறைமையும், உடலுக்கு உபயோகமான பாக்டீரியாக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகும்போது, இந்த நோய்க்காரணிகளுக்கு அந்நிலமை சாதகமாக மாறி, அவை தமது ஓம்புயிரில் உட்சென்று, பல்கிப் பெருகி, நோயை ஏற்படுத்த முடிகின்றது. எய்ட்சு அல்லது நோயெதிர்ப்பாற்றல் குறைபாட்டு நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வீ (HIV) வைரசினால், அல்லது, வேறு உடலூறு விளைவிக்கும் கிருமிக்கெதிராக பாவிக்கப்படும் கிருமியெதிர்ப்பிகள் அல்லது நுண்ணியிர்கொல்லிகள் சாதாரண உடலுக்கு நன்மைபயக்கும் பாக்டீரியாக்களையும் கொல்வதனால் இந்நிலை தோன்றலாம்.
உயிராபத்தில்லாத சாதாரண நோய்களை தரும் நோய்க்காரணிகள் (உ.ம்: சாதாரண தடிமலை (common cold) ஏற்படுத்தும் வைரசு) முதல், உலகளவில் அதி வேகமாக பரவி, மக்கள் சனத்தொகையில் கணிசமான அளவு இறப்பை ஏற்படுத்தும் அபாயமான நோய்க்காரணிகள் வரை நமது சூழலில் காணப்படுகின்றன. தற்கால சூழலில், எச்.ஐ.வீ (HIV) வைரசானது, உலகளவில் பல மில்லியன் மக்களில் தொற்றை ஏற்படுத்தி, எய்ட்சு நோயை உருவாக்கி, இன்ஃபுளுவென்சா வைரசுடன் சேர்ந்து, மக்கள் இறப்புக்கு காரணமாகும், அபாயகரமான ஒரு நோய்க்காரணியாகும்.
தடுப்பூசி (vaccination), கிருமியெதிர்ப்பி (antibiotics), பங்கசு எதிர்ப்பி அல்லது பூஞ்சையெதிர்ப்பி (fungicides) பாவனைகளால், மருத்துவ முன்னேற்றமானது பல நோய்க்காரணிகளின் தொற்றையும், அவற்றால் உருவாகும் நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதிலும், மேலும் புதிய நோய்க்காரணிகளின் அறிமுகத்தாலும், ஏற்கனவே காணப்படும் நோய்க்காரணிகளில் ஏற்படும் தெரிவான மாற்றங்களால், அவை மருந்துகளுக்கெதிரான எதிர்ப்புத் தன்மையைக் காட்டும் புதிய வகைகளை உருவாக்கிக் கொள்வதாலும், நோய்க்காரணிகளால் மனித இனத்திற்கு இருக்கும் ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நல்ல உணவுப் பழக்க வழக்கத்தை கொண்டிருத்தல், தகுந்த உடல் சுகாதாரம் பேணல், நல்ல குடிநீர்ப் பாவனை போன்ற சில செயற்பாடுகளால் நோய்க்காரணிகளின் தாக்கத்தை ஓரளவு குறைத்து வைத்திருக்க முடியும்.