பந்துசுத்தான்
From Wikipedia, the free encyclopedia
பந்துசுத்தான் (Bantustan) அல்லது பன்டு தாயகம், கறுப்பினர் தாயகம், கறுப்பினர் நாடு அல்லது சுருக்கமாக தாயகம் எனப்படும் நிலப்பகுதிகள் இனவொதுக்கல் கொள்கைப்படி தென்னாப்பிரிக்காவிலும் தென் மேற்கு ஆப்பிரிக்காவிலும் (தற்போதைய நமீபியா) கறுப்பின மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதிகளாகும். தென்னாப்பிரிக்காவில் பத்து பந்துசுத்தான்கள் நிறுவப்பட்டிருந்தன. அடுத்திருந்த தென்மேற்கு ஆபிரிக்காவில் (அப்போது தென்னாப்பிரிக்க நிர்வாகத்தில் இருந்தது) பத்து பந்துசுத்தான்கள் நிறுவப்பட்டிருந்தன. ஒவ்வொரு குறிப்பிட்ட இனமக்களுக்கும் செறிவுபடுத்தப்பட்ட பந்துசுத்தான் உருவாக்கப்பட்டிருந்தன. இதனால் ஒவ்வொரு பந்துசுத்தானும் ஒரே இனத்தவர் வாழுமாறு அமைக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு கறுப்பின இனங்களுக்கு தனித்தனியான "தன்னாட்சி" பெற்ற நாட்டு மாகாணங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இவ்வாறு உருவாக்கப்பட்டது.
இச்சொற்றொடர் முதன்முதலில் 1940களின் பிற்பகுதியில் உருவானது; சில பண்டு மொழிகளில் பன்டு என்பதற்கு "மக்கள்" என்ற பொருள் இருந்தது; -ஸ்தான் என்ற பின்னொட்டு பாரசீக மொழியிலிருந்து "நாடு" என்ற பொருளுடன் பயன்படுத்தப்பட்டது. இச்சொல்லை இழிவுதரும் சொல்லாக "தாயக" அரசியலில் கருதப்பட்டது. இன்று, இச்சொல் "பந்துசுத்தான்", இழிசொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது.
தென்னாப்பிரிக்காவின் நான்கு பந்துசுத்தான்கள்—டிரான்ஸ்கெய், போப்புதட்சுவானா, வெண்டா, சிஸ்கெய் (இவை "TBVC அரசுகள்" எனப்பட்டன)—தன்னாட்சி பெற்றவையாக அறிவிக்கப்பட்டன; ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே இது அலுவல்முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு, லெபோவா போன்ற பிற பந்துசுத்தான்களுக்கு பகுதியாக தன்னாட்சி வழங்கப்பட்டது, ஆனால் இவற்றிற்கு தன்னாட்சி வழங்கப்படவில்லை. தென்மேற்கு ஆபிரிக்காவில் ஓவம்போலாந்து, காவன்கோலாந்து, கிழக்கு கேப்ரிவி தன்னாட்சி பெற்றன.
இனவொதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்ட பின்னர் தென்னாப்பிரிக்காவில் பந்துசுத்தான்கள் அழிக்கப்பட்டு மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.