புதிய ஏழு உலக அதிசயங்கள்
From Wikipedia, the free encyclopedia
உலகின் புதிய ஏழு அதிசயங்கள் (New 7 Wonders of the World, 2000-2007) என்பது உலகின் பழைய ஏழு அதிசயங்களின் யோசனையை புதிய அதிசயங்களின் ஒரு பட்டியலைக் கொண்டு புதுப்பிப்பதாகும். நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை என்னும் தனியார் நிறுவனம் பிரபலமுற்றவைக்கான கருத்துக்கணிப்பு ஒன்றினை ஏற்பாடு செய்தது, வெற்றி பெற்றவை 2007 சூலை 7 அன்று போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட்டன[1][2]
100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் தங்கள் வாக்குகளை இணையம் வழியாக அல்லது தொலைபேசி வழியாக பதிவு செய்ததாக சுவிட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு செயல்படும் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தெரிவிக்கிறது. ஒருவரே பலவாக்குகளை பதிவு செய்வதை தடுக்க வழியில்லாததால், இந்த கருத்துக்கணிப்பு "தீர்மானமாக அறிவியல் பூர்வமற்ற" ஒன்றாகக் கருதப்படுகிறது[3]. வாசிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும் கருத்துக்கணிப்பு நிறுவனமான ஜோக்பி இன்டர்னேஷனல் நிறுவனரும் தற்போதைய தலைவர்/தலைமை செயல் அதிகாரியுமான ஜான் ஜோக்பியின் கூற்றுப்படி, நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை "இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப் பெரிய கருத்துக்கணிப்பை" நடத்தியிருக்கிறது.
இந்த திட்டம் பரவலான வீச்சில் அதிகார பூர்வ எதிர்வினைகளைப் பெற்றது. சில நாடுகள் தங்களின் இறுதித்தேர்வுக்குக் கூடுதலான வாக்குகள் சேகரிக்க பிரயத்தனப்பட்டன, ஏனையவை இந்தப் போட்டியை அலட்சியம் செய்தன அல்லது விமர்சித்தன[3]. பரப்புரையின் தொடக்கத்தில் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளைக்கு ஆதரவளித்து அதிசயங்கள் தேர்வு செய்வதில் ஆலோசனைகளை எல்லாம் வழங்கிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) 2007 இல் இந்த ஸ்தாபனத்தில் இருந்து தள்ளி நின்று கொண்டது[4][5]
கூடுதலான நினைவுச் சின்னங்கள் அவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இணைய தளங்கள் மூலம் அல்லது தேசிய இணைய தளங்களிலான வலிமையான ஆதரவு விளம்பரங்கள் மூலம் ஆதரிக்கப்பட்டன. பல நாடுகளில் தேசிய தலைவர்களும் பிரபலங்களும் நியூ7ஒன்டர்ஸ் பரப்புரைக்கு ஊக்கமளித்தனர்[6]. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்த வாக்காளர்களின் புவியியல் ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான பன்முகத் தன்மையைக் கொண்டு பார்த்தால், உலகளாவிய பேச்சு வார்த்தை மற்றும் கலாச்சார பரிவர்த்தனை என்னும் தனது நோக்கம் சாதிக்கப்பட்டிருப்பதைக் காண்பதாக நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்துள்ளது[7].
2001 இல் நிறுவப்பட்ட இந்த நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தனியார் நன்கொடைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகள் ஆகியவற்றைக் கொண்டே இயங்கியது, எந்தப் பொதுப் பணத்தையோ அல்லது வரி செலுத்துவோர் பணத்தையோ ஏற்றுக் கொண்டதில்லை[7]. முடிவு அறிவித்த பிறகு, இதன் மூலம் தமக்கு எந்த வருவாயும் கிட்டவில்லை என்றும் தனது முதலீடுகளையே ஓரளவுக்குத் தான் மீட்க முடிந்தது என்றும் நியூ7ஒன்டர்ஸ் தெரிவித்தது[8][9].
உலகின் புதிய ஏழு அதிசயங்களுக்கான வாக்கெடுப்பை, மனிதகுல வரலாற்றில் முதலாவது உலகளாவிய ஜனநாயக நடைமுறை என்று அழைத்தார் நியூ7ஒன்டர்ஸ் அறக்கட்டளை தலைவரான பெர்னார்டு வெபர்[10]. 2007 இல் இயற்கையின் புதிய ஏழு அதிசயங்கள் (New7Wonders of Nature) என்றழைக்கப்பட்ட இதே மாதிரியான ஒரு போட்டியை இந்த அறக்கட்டளை துவக்கியிருக்கிறது, தேர்வு விண்ணப்பங்கள் 2011 நவம்பர் 11 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன. நியூ7ஒன்டர்ஸ் நகரங்கள் (New7Wonders Cities) என்பது தற்போது நடைமுறையில் உள்ள திட்டம் ஆகும். இதற்கான வாக்கெடுப்பு சூலை 2014 வரை இடம்பெறும்.[11]