வெப்ப மாசுபாடு
From Wikipedia, the free encyclopedia
வெப்ப மாசுபாடு (Thermal pollution) (சில நேரங்களில் வெப்ப உயர்வு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது சூழ்நிலையில் உள்ள நீரின் வெப்பநிலையில் ஏதாவது ஒரு செயல்முறையின் காரணமாக உயர்வு ஏற்பட்டு அதனால் நீர்த் தரத்தில் உருவாகும் தரக்குறைபாடாகும். வெப்ப மாசுபாடு என்பது மனித நடவடிக்கைகளின தாக்கத்தினால் இயற்கையான நீரின் வெப்பநிலையில் ஏற்படும் உயர்வு அல்லது வீழ்ச்சியாகும்.[1] வெப்ப மாசுபாடானது, வேதி மாசுபாடு போலல்லாமல், நீரின் இயற்பியல் பண்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.[2] மின் நிலையங்கள் மற்றும் தொழில் முறை உற்பத்தியாளர்களால் குளிர்விப்பானாகப் பயன்படுத்தும் நீரே வெப்ப மாசுபாட்டிற்கான ஒரு பொதுவான காரணமாகத் திகழ்கிறது.[3] சாலைகள் மற்றும் ஊர்திகள் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றிலிருந்து வருகின்ற நகர்சார்ந்த ஓடுநீரான மழைநீர் மேற்பரப்பு நீருடன் இணைக்கப்படுவதும் வெப்ப மாசுபாட்டிற்கான காரணமாக அமையலாம்.[4] நீர்த்தேக்கங்களின் அடிப்பகுதியில் இருந்து மிகவும் குளிர்ந்த நீரானது வெப்பமான ஆறுகளில் கலப்பதாலும் வெப்ப மாசுபாடு ஏற்படலாம்.
குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படும் நீர் அதிக வெப்பநிலையில் இயற்கைச் சூழலுக்குத் திரும்பும்போது, வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றம் ஆக்சிசன் விநியோகத்தைக் குறைத்து, சூழலியல் அமைப்பின் இயல்பைப் பாதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட இயல்பான வெப்பநிலையில் வாழப் பழகிய மீன்கள் மற்றும் இதர உயிரினங்கள் திடீரென ஏற்படும் வெப்பநிலை மாறுபாட்டால் (திடீர் வெப்பநிலை உயர்வு அல்லது திடீர் வெப்பநிலை தாழ்வு) கொல்லப்படுகின்றன. இந்த திடீர் வெப்பநிலை மாறுபாடு வெப்ப அதிர்வு எனவும் அழைக்கப்படுகிறது. சூடான குளிரூட்டி நீர் நீரின் வெப்பநிலையில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும், ஆழமான நீர்நிலைகள் உட்பட நீர்நிலைகளின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கும். இந்த வெப்பநிலை அதிகரிப்பு நீர்க்கலம் முழுவதும் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பருவநிலையே தீர்மானிக்கிறது. நீரின் வெப்ப நிலை உயர்வு மற்றும் அதன் விளைவாக ஆக்சிசன் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவை மீன்கள் போன்ற உயிரினங்களைக் கொன்று உணவுச் சங்கிலியின் இயல்பையே சீர்குலைத்து, உயிரியற் பல்வகைமைக்கும் கேடு விளைவிக்கிறது. இத்தகு சூழலானது வெப்பநிலை உயர்வை அல்லது மாற்றத்தை விரும்பக்கூடிய உயிரினங்களின் படையெடுப்பை ஊக்குவிக்கிறது.[5][6]:375