சீனி
From Wikipedia, the free encyclopedia
சீனி (இந்திய வழக்கில் சர்க்கரை) சிறிய கட்டிகளால் ஆன திண்மப் பொருளாகும். சீனி பல பொருட்களில் இருந்து வருவிக்கப்படுகின்றது. சீனியானது கரும்பு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இது இந்தியா, பாக்கித்தான், சீனா மற்றும் ஆத்திரேலியா நாடுகளில் கரும்பில் இருந்தே பெறப்படுகின்றது. இலங்கையில் திருகோணமலை, கந்தளாய் பகுதியில் சீனித் தொழிற்சாலைகள் இருந்தன. பின்னர் மூடப்பட்டன. இது பொதுவாக சுக்குரோசு (Sucrose) எனப்படும் கார்போவைதரேட்டு ஆகும். எளிய சர்க்கரைகள் ஒற்றைச்சர்க்கரைகளையும் (monosaccharides) குளுக்கோசு காலக்டோசு மற்றும் புருக்டோசையும் (fructose) கொண்டவை. தானிய சர்க்கரை பாரம்பரியமாக பயன் படுத்தப்பட்டு வருவதாகும். இதில் இரட்டைச்சர்க்கரையான சுக்குரோசு காணப்படுகின்றது. இரட்டைச்சர்கரைகளில் லாக்டோசு (Lactose) மற்றும் மால்டோசு (Maltose) போன்றவையும் அடங்கும். சர்க்கரையின் நீண்ட தொகுப்புக்கள் ஒலிகோசர்க்கரைகள் (Oligosaccharide) என அழைக்கப்படுகின்றன. வேறு சில இரசாயனப் பொருட்களும் சீனியின் இனிப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். எனினும் அவற்றை சீனியாகப் பாகுபடுத்த முடியாது. சில இரசாயனப் பொருட்கள் குறைந்த கலோரியைக் கொண்ட உணவு மாற்றுக்களாகப் பயன்படுகின்றன, அவற்றை சர்க்கரைப் பதிலீடு என அழைப்பர்.
சீனியானது பல்வேறு தரப்பட்ட தாவரங்களின் இழையத்தில் காணப்படுகின்றது. எனினும் கரும்பு மற்றும் பீற்றூட் போன்றவற்றிலேயே கூடிய செறிவுடனான இலகுவாகப் பிரித்தெடுக்கக்கூடிய சீனி வகை காணப்படுகின்றது. கரும்பானது பாரிய ஒரு புல் வகைத் தாவரம் ஆகும். வெப்பமண்டல காலநிலைகளில் இதனை அறுவடை செய்யலாம். இது உலகத்தின் கிழக்குப்பிரதேசத்தில் பண்டைக்காலம் தொட்டே பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. 18 ஆம் நூற்றாண்டிலே கரும்பு பாரிய விளைச்சலைப்பெற்றதோடு மட்டுமன்றி அதன் மூலம் பாரிய அளவு சீனியும் அதாவது சர்க்கரையும் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வறு நிகழ்ந்தது மேற்கு இந்தியா மற்றும் அமெரிக்காப் பிரதேசங்களிலேயே ஆகும். இதுவே பொது மக்களும் கரும்பின் மூலம் சீனியைப்பயன்படுத்திய முதல் தடவையாகும். இதற்கு முன் தேன் போன்றவையே இனிப்புத் தேவைக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பீட்ரூட் ஒரு வகையான வேர்ப்பயிர் ஆகும். இது குளிர்மையான காலநிலைகளில் பயிரிடக்கூடியதாகும். அத்துடன் 19 ஆம் நூற்றான்டில் சீனிக்குப்பயன் படுத்தக்கூடிய பிரதான வளமாக மாறியதுடன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய நிலைமையை அடைந்தது. வர்த்தகமும் சீனி உற்பத்தியும் பலவழிகளில் மனித வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது.