படிவளர்ச்சிக் கொள்கை
From Wikipedia, the free encyclopedia
உயிரியலில் படிவளர்ச்சிக் கொள்கை (ஆங்கிலம்: evolution) (தமிழ்நாட்டு வழக்கு: பரிணாம வளர்ச்சிக் கொள்கை; இலங்கை வழக்கு: கூர்ப்புக் கொள்கை) என்பது ஓர் உயிரினத்தின் பண்புகள், தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. இவ்வாறாக உள்ளது சிறந்து மிகுதலை தொல்காப்பியம் தொட்டு பல பண்டைத் தமிழிலக்கியங்களில் கூர்ப்பு என்று வழங்கியுள்ளனர்.[1]
பொதுவாக இப்படி வளர்ச்சி மாற்றங்கள் இருபெரும் வழிகளில் உந்தப்படுவதாகக் கருதப்படுகின்றன. முதல் வகை உந்துதலுக்கு இயற்கைத் தேர்வு என்று பெயர். இது ஓரினத்தில் தலைமுறை தலைமுறையாய் பரவிவரும் பண்புகளில் தங்கள் இனத்தின் நல்வாழ்வுக்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவியாய் இருக்கும் பயனுடைய பண்புகள் அவ்வினத்திற் பரவலாக பாதுகாக்கப்பட்டும், கெடுதி தரும் பண்புகள் அருகியும் அற்றும் போகின்றன என்ற கருத்தாக்கம். இப்படிப் பயனுடைய பண்புகள் இருந்தால் அவை அடுத்த தலைமுறையிலும் பிழைக்க வாய்ப்பிருப்பதால், இவை பரப்பப்பட்டு நிலைபெறுவதாகக் கருதப்படுகின்றது.[2][3] பல தலைமுறைகளாக வளர்ச்சியுறும்பொழுது ஓர் உயிரினத்தின் பண்புகள் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப, தக்க, இசைவான மாற்றங்கள் அடைகின்றன.[4] இவற்றை இயல் தேர்வு அல்லது இயற்கைத் தேர்வு என்று அழைக்கிறார்கள். படிவளர்ச்சி மாற்றத்திற்கு இரண்டாவது உந்துதலாக அமைவது தன் நேர்ச்சியாய் ஏற்படும் மாற்றங்கள், நிலைபெறும் வாய்ப்பைப் பொறுத்தது. இதற்குத் தகவமைவு அல்லது மரபணு பிறழ்வு நகர்ச்சி (Genetic drift) என்று பெயர்.
இக்கொள்கை புவியிலுள்ள உயிர்களின் பொது மூலத்திலிருந்து எல்லா உயிரினங்களின் தோற்றத்தை விளக்குவதால், உயிரியல் பிரிவின் மையக் கொள்கையாகத் திகழ்கிறது.