பனாமா கால்வாய்
From Wikipedia, the free encyclopedia
பனாமா கால்வாய் (எசுப்பானியம்: Canal de Panamá) என்பது பசுபிக் பெருங்கடலையும் அத்திலாந்திக் பெருங்கடலையும் அமெரிக்கக் கண்டங்களிடையே இணைக்கும் செயற்கைக் கால்வாய் ஆகும். இது 80 கிமீ நீளமுள்ள நீர்வழி ஆகும். இது பனாமாவின் இஸ்தமுவில் பகுதியில் வெட்டப்பட்டுள்ளது மேலும் இக்கால்வாய் சர்வதேச கடல்வழி வர்த்தகத்திற்கான முக்கிய வழியாக உள்ளது. இக்கால்வாயில் இருந்து கப்பல்கள் காட்ன் ஏரியை அடையும்வரை கால்வாயின் ஒவ்வொரு முனையிலும் நீரை அடைத்து நீர்மட்டத்தைக் கூட்ட, குறைக்க கதவணை அமைப்புகள் உள்ளன, கால்வாயை கடல் மட்டத்தின் ஆழத்துக்கு மிக ஆழமாக அகழுவதைத் தவிர்க்கும்விதமாக கடல் மட்டத்திற்கு 26 மீட்டர் (85 அடி) உயரத்திற்கு மேலே ஒரு செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது, இதில் உள்ள கதவணைகள் 33.5 மீட்டர் (110 அடி) அகலம் கொண்டவையாக உள்ளன. மூன்றாவது அகன்ற நீர்பாதையானது அகன்ற கதவணைகளுடன் செப்டம்பர் 2007 மற்றும் மே 2016வுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டது. விரிவாக்கப்பட்ட கால்வாயில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி வணிக நடவடிக்கையைத் தொடங்கியது. புதிய பெரிய கதவணைகளை அமைத்ததற்குப், பிந்தைய பனாமா கால்வாயில் பெரிய கப்பல்களின் போக்குவரத்தை அனுமதிக்க ஏற்றதாகவும், மேலும் மிகுதியான சரக்குகளைக் கையாளக்கூடிய திறன் கொண்டதாகவும் ஆனது.[1] இது அமைக்கப்படும் முன்னர் கப்பல்கள் தென்னமெரிக்கக் கண்டத்தைச் சுற்றியே செல்ல வேண்டியிருதது.
பதினாறாம் நூற்றாண்டிலேயே இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 1881 இல் பிரான்சு தலைமையில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. 22000 தொழிலாளர்கள் இறந்து இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. 1904 இல் ஐக்கிய அமெரிக்கா மீண்டும் இப்பணியைத் தொடங்கி 1914 ஆகத்து 15 அன்று பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் கடினமான பொறியியல் திட்டங்களில் இது ஒன்று ஆகும். இந்த பனாமா கால்வாயின் குறுக்குவழியானது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே பயணம் செய்யும் கப்பல்களுக்கான நேரத்தைக் குறைத்தது மட்டுமல்லாது, டிராகன் நீரிணை அல்லது மிரெல்லன் ஸ்ட்ரெய்ட் வழியாக தென்னமெரிக்காவின் தென்முனையில் உள்ள அபாயகரமான கேப் ஹார்ன் பாதை ஆகியவற்றை கப்பல்கள் கடந்து செல்லும் பயணத்தை தவிர்த்தன.
பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது. கால்வாய் கட்டுமாணக் காலத்தில் கால்வாயைச் சுற்றியுள்ள பகுதிகளை கொலம்பியா, பிரான்ஸ், பின்னர் அமெரிக்கா ஆகியவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இந்நிலையில் பனாமாவின் அரசாங்கத்தால் 1999 இல் இக்கால்வாய் கையகப்படுத்தப்பட்டது. இப்போது அரசுக்கு சொந்தமான பனாமா கால்வாய் ஆணையத்தால் இது நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
கால்வாய் 1914 ல் திறக்கப்படும்போது சுமார் 1,000 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து 2008 ல் 14,702 கப்பல்களாக உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு வரை 815.000க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாய் வழியாக கடந்துள்ளன.[2] பனாமா கால்வாய் வழியாக கப்பல்கள் செல்ல ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆகும். நவீன உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பனாமா கால்வாயை அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் குறிப்பிடுகிறது.[3]