நோயாளர் ஊர்தி
நோயாளர் காவு ஊர்தி / From Wikipedia, the free encyclopedia
நோயாளர் ஊர்தி (Ambulance) என்பது நோயுற்ற அல்லது காயம்பட்ட ஆட்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கொண்டு செல்வது அல்லது சிகிச்சை முடிந்து திரும்ப வீட்டிற்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ஊர்தி[1]. சில நேரங்களில் மருத்துவமனைக்கு வெளியே சில மருத்துவ சிகிச்சைகளை நோயாளர் ஊர்தியிலே பெற முடியும். இந்த சொல்லோடு தொடர்புடைய விளக்கம் இது: அவசர நோயாளர் ஊர்தி, அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ கவனிப்பு போன்ற உதவிகளை கடும் நோயினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அளிப்பது.
எச்சரிக்கை விளக்கு மற்றும் சங்கொலி ஏந்திச் செல்லும் ஊர்தி தவிர, நோயாளர் ஊர்தி என்பது மேலதிகப் பரப்பெல்லை கொண்டதாகும். இச்சொல் சுமையுந்து, கூண்டுந்து, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள், பேருந்து, உலங்கு வானூர்தி, வானூர்தி, மருத்துவக் கப்பல் போன்ற அவசரம் காட்டாத நோய் கடுமையற்ற நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் மற்றும் அவசர ஊர்திகளைக் குறிப்பன. அவசர ஊர்தி என்பது மருத்துவத் தேவையுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் கட்டாயத் தேவையாக இருந்து வருகிறது. அவசர ஊர்தியில் நோயாளிகளின் நலன் காக்கவும் ஆபத்தான சூழலில் நோயாளிக்கு முதலுதவி அளிக்கவும் மமருத்துவ பயிற்சி பெற்ற உதவியாளர்கள் உள்ளனர்.
ஆம்புலன்சு என்ற ஆங்கிலச் சொல் அம்புலரே என்ற இலத்தீன வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டு நட அல்லது நகர்த்து என்ற பொருளில் அறியப்பட்டது[2]. தொடக்க காலத்தில் நோயாளிகளைத் தூக்கியவாறோ சக்கர நாற்காலி அல்லது எடுப்புப் படுக்கையில் வைத்தோ கூட்டிச்சென்றார்கள். இச்சொல் பெரிதும் இடம்பெயரும் இராணுவப் படையுடன் தொடர்புபடுத்தி நகரும் மருத்துவமனை என்று அறியப்பட்டது[3]. அமெரிக்க உள்நாட்டுப் போர்களில் காயம்பட்டவர்களை போர் முனையிலிருந்து அப்புறப்படுத்தப் பயன்பட்ட ஊர்தி, நோயாளர் சுமை வண்டி என்று அழைக்கப்பட்டது[4]. நோயாளர் சுமை வண்டிகள் 1854 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிரிமிய போரில் [5] குறிப்பிடப்பட்டாலும், பிரெஞ்சு புரூசிய (1870 ஆம் ஆண்டு) [6] மற்றும் சேர்பியா துருக்கி (1876 ஆம் ஆண்டு)[7] போர்களில் பணியாற்றிய போர்க்கள மருத்துவமனைகள் நோயாளர் ஊர்தி என்றே அழைக்கப்பட்டன.
நோயாளர்களை ஏற்றிச்செல்லும் ஊர்தியையே குறித்தாலும், நிறைய நோயாளர் ஊர்திகள் உள்ளன. இந்த ஊர்திகள் பொதுவாக உயிர் காக்கும் கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர் அல்லது மருத்துவர் போன்ற வசதிகளை (சில விதி விலக்குகள் இருந்தாலும்) அளிப்பதில்லை. எல்லா நாடுகளிலும் இவற்றின் நோக்கம் நோயாளிகளை சிகிச்சை பெற அழைத்த்துச் செல்லல் மற்றும் திரும்ப வீட்டிற்கு அழைத்து வருதல்; இவற்றில் அவசர விளக்கோ அல்லது எச்சரிக்கை சங்கு ஒலியோ இருப்பதில்லை. சில பகுதிகளில் நோயாளர் ஊர்தி ஊழியர் மருத்துவ உதவி அளிக்க களத்துக்குச் செல்லும் வசதியுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை ஊர்திகள் நோயர்களை அழைத்துச் செல்வதில்லை[8]. இவற்றின் பெயர் பறக்கும் ஊர்தி என்பதாகும்.