பிளாண்டர் புலத்தில்
From Wikipedia, the free encyclopedia
பிளாண்டர் புலத்தில் (In Flanders Fields) என்பது முதலாம் உலகப் போர்க் காலத்தில் கனடிய போர் மருத்துவர் லெப்டினன்ட் கேணல் சோன் மக்கிரே என்பவரால் எழுதப்பட்ட ஒரு போர்க் கவிதை ஆகும்.[1] இக்கவிதை மே மாதம் மூன்றாம் நாள் 1915இல் தனது நண்பனும் சக படைவீரருமான அலெக்சிசு கெல்மர் என்பவரது இழப்பின் உத்வேகத்தால் உருவாகியது. டிசம்பர் எட்டாம் நாள் இலண்டனில் வெளியாகிய பஞ்ச் பத்திரிகையில் வெளிவந்தது.
முதலாம் உலகப்போரில் படைவீரர்களிடையே மிகவும் பிரபலம் பெற்றதும் அடிக்கடி கூறப்படுவதுமான கவிதையாக இது விளங்கியது. இதன் திடீர்ப் பிரசித்தி காரணமாக, கவிதையின் சிலவரிகள் போருக்கு பணம், படைபலம் திரட்ட உதவியது. இக்கவிதையில் போரில் உயிரிழந்த வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதுவே நினைவுறுத்தும் நாளின் சின்னமாக இன்று விளங்குகின்றது. இக்கவிதையும் பொப்பிச் சின்னமும் பொதுநலவாய நாட்டு மக்களிடையே, குறிப்பாக கனடாவில், பிரபல்யமானவையாக உள்ளன.