நினைவுகூரும் நாள்
From Wikipedia, the free encyclopedia
நினைவுகூரும் நாள் (Remembrance Day) என்பது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இந்த நாள் நவம்பர் 11 இல் பொதுநலவாய நாடுகள் பலவற்றில் அவதானிக்கப்படுகிறது. இந்த நாளில் ஒரு பொப்பியை நினைவுக் குறியீடாக அணிவர். நினைவுகூரும் நாள் பல ஈழத் தமிழர்கள் அவதானிக்கும் மாவீரர் நாளுக்கு ஒத்தது.
நினைவுகூரும் நாள் | |
---|---|
கனடாவில் நினைவுகூரும் நாள். சோன் மாக்கிரேயின் பிறப்பிடத்தில் உள்ள நினைவகம். இரண்டு பொப்பிப் பட்டிகள் நூல் சிற்பத்தின் மேலே இருப்பதைக் காண்க. | |
அதிகாரப்பூர்வ பெயர் | நினைவுகூரும் நாள் |
பிற பெயர்(கள்) | பொப்பி நாள், போர் நிறுத்தநாள் |
கடைபிடிப்போர் | பொதுநலவாய நாடுகள் (மொசாம்பிக் தவிர்ந்த) |
வகை | அனைத்து உலகம் |
முக்கியத்துவம் | போரில் உயிரிழந்த பொதுநலவாய நாட்டு மக்களையும் வீரர்களையும் நினைவு கூறல் |
அனுசரிப்புகள் | அணிவகுப்புகள், மௌன அஞ்சலி |
நாள் | 11 நவம்பர் |
தொடர்புடையன | Veterans Day, நினைவு நாள் (ஐக்கிய அமெரிக்கா), அன்சாக் நாள் |
முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும் செருமானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது. [1]
இந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.[2] எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூருவர்.
சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது. போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் "பிளாண்டர் புலத்தில்" எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.
கனடாவில் "லெஸ்ட் வீ போர்கெட்" (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது.