இந்தியப் பெருங்கடல்
பெருங்கடல் / From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து மகா சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா)[1] ஆகியன இதன் எல்லைகள். மகா சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.
இக்கடல் அகுல்யாசு முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது.
ஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன.