கிருட்டிணன்
இந்துக் கடவுள் / From Wikipedia, the free encyclopedia
கிருட்டினன், கிருட்டிணன், அல்லது கிருஷ்ணன் (Krishna) இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விட்டுணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்டிண செயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருட்டினன் | |
---|---|
கிருட்டினர் | |
தேவநாகரி | कृष्ण |
சமசுகிருதம் | Kṛṣṇa |
தமிழ் எழுத்து முறை | கிருட்டினன் |
வகை | விட்டுணுவின் அவதாரம் |
இடம் | மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகை |
மந்திரம் | ஓம் நமோ நாராயணா |
ஆயுதம் | சுதர்சன சக்கரம் |
துணை | ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை |
நூல்கள் | பாகவத புராணம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மகாபாரதம், உத்தவ கீதை மற்றும் பகவத் கீதை |
கிருட்டிணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது. ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விட்டுணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.
கிருட்டிண வழிபாடு, பாலகிருட்டிணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் பொ.ஊ.மு. 4வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணன் (திருமால்) பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் கூறப்பட்டவர். எனினும் பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருட்டிணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. ஒரிசாவில் செகன்னாதர், இராசத்தான், மகாராட்டிராவில் உள்ள விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில், துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதர் என கிருட்டிணனை பல பெயர்களில், வடிவங்களில் வழிபடுகின்றனர். 1960களில் உருவாக்கப்பட்ட இசுகான் அமைப்பு கிருட்டிண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது. பொ.ஊ. 6-9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் (கண்ணன்) வழிபடப்பட்டுள்ளார்.