யது குலம்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
யது குலம் அல்லது யாதவ குலம் (Yadava), பண்டைய பாரத இதிகாச, புராணங்களின்படி, யயாதி மகனான யதுவின் வழித்தோன்றல்கள் ஆவார்.[1] யயாதி மன்னன் கோபத்தின் காரணமாக, தன் மூத்த மகன் யதுவும், அவனது வழித்தோன்றல்களும், இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது எனக் கொடுத்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து, பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் யாதவர் குலம் தோன்றியது. யாதவர்கள் அனைவரும் இன்று வரை ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். பின்னாட்களில் யாதவர்கள் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிலும் சிறிதும் பெரிதுமான பகுதிகளை ஆண்டனர். [2] பண்டைய இந்தியாவிலும், மத்தியகால இந்தியாவிலும், தற்கால இந்தியாவிலும், ஆடு, மாடுகளை வளர்க்கும் பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்களை, கிருஷ்ணரின் யாதவ குலத்தின் வழி வந்தவர்கள் என கருதுகின்றனர்.[3][4]
புராணங்களில் குறித்த பல்வேறு யாதவ குலங்களிடையே ஹைஹேயேர்கள் எனும் குலத்தினர் மட்டும் தங்களை, யதுவின் மூத்த மகன் சகரஸ்ரஜித்தின் வழித்தோன்றல்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.[5] மற்ற அனைத்து யாதவ குலங்களான சேதி நாட்டவர்கள், விதர்ப்ப நாட்டவர்கள், அந்தகர்கள், குகுரர்கள், போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் யதுவின் இளைய மகன் குரோஸ்துவின் வழித்தோன்றல்கள் என நம்புகின்றனர்.[6]
புராணங்களில் கூறியுள்ள, யாதவ குலங்களின் வரலாற்றின்படி, யாதவ குலங்கள் ஆரவல்லி மலைத்தொடர் பகுதிகள், குஜராத், நர்மதை ஆற்றின் சமவெளிப் பகுதிகள், வடக்கு தக்காணப் பகுதிகள், கிழக்கு கங்கைச் சமவெளி பகுதிகள் பரவி வாழ்ந்தனர். யாதவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு ஏற்ப, காலப்போக்கில் யாதவ குலத்தில் விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள், சேதிகள் என உட்பிரிவுகள் கிளைத்தன. மகத நாட்டின் அரசன் ஜராசந்தனின் அழுத்தத்தினால் யாதவர்கள் மதுராவை நீங்கி சௌராஷ்டிர பகுதியில் உள்ள துவாரகை நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.