இந்துக் கோயில் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
இந்து சமயத்தவருக்கு உரிய வழிபாட்டு இடமான இந்துக் கோயில்கள் தொடர்பான கட்டிடக்கலை இந்துக்கோயில் கட்டிடக்கலை ஆகும். இந்து சமயத்தில் பல்வேறு கட்டிடக்கலைகள் இருந்தாலும் அவை அனைத்திற்கும் ஒற்றுமை உள்ளது. கர்ப்பக்கிரகம், கருவறை, அர்த்த மண்டபம், கலசம் முதலியவை அனைத்து இந்து சமயக் கட்டிடக் கலைகளிலும் பொதுவான அம்சங்களுள் சிலவாகும். இந்து சமயம் தற்போது வழக்கிலுள்ள பல சமயங்களுக்கு மூத்த சமயமாக இருந்தும், இதன் தோற்றம் எப்பொழுது நடைபெற்றது என்று தெரியாத அளவுக்குப் பழமை வாய்ந்த சமயமாக இருந்தும், இதன் அடிப்படையாகக் கருதப்படும் வேதங்கள் பொ.ஊ.மு. 1500 க்கு முன்னரே தோன்றியிருந்தும், இன்று வரை நிலைத்திருக்கின்ற இச் சமயத்துக்குரிய கோயில்கள் பிற்பட்ட காலத்துக்குரியவையே. ஆரம்பகால இந்துக்கோயில் கட்டிடங்கள் பெரும்பாலும் அழிந்து போகக்கூடிய கட்டிடப்பொருட்களால் கட்டப்பட்டு இருந்ததாகக் கருதப்படுகின்றது. எனினும் கிடைக்கக்கூடிய சான்றுகளை வைத்து இந்துக்கோயில்களின் தோற்றம், தொடக்ககால இந்துக்கோயில்களின் அமைப்பு, அதன் வளர்ச்சி என்பன பற்றிப் பலர் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.