உப்பு
உணவில் பயன்படுத்தப்படும் கனிமம் / From Wikipedia, the free encyclopedia
உப்பு (Salt) என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது ஆகும்.
மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகள் ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.
சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர். சீனாவிலும் இதே காலகட்டத்தில் உப்பு-உற்பத்திப் பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைய எபிரெயர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். வணிகத்தில் உப்பு முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. மத்தியதரைக் கடல் முழுவதும் படகு மூலம் சிறப்பாக கட்டப்பட்ட உப்பு சாலைகளிலும், மற்றும் ஒட்டக வணிகர்கள் மூலம் சகாரா முழுவதற்கும் உப்பு கொண்டு செல்லப்பட்டது. உப்புக்கான பற்றாக்குறை மற்றும் உலகளாவிய தேவையை முன்னிட்டு நாடுகளுக்கு எதிராக போர்கள் நடைபெற்றன. உப்பின் மீதான வரி வருவாய் உயர்த்தப்பட்டது. மத விழாக்களிலும் பிற கலாச்சார நிகழ்வுகளிலும் உப்பு முக்கியத்துவத்தைப் பெற்றது.
உப்பு சுரங்கங்களிலிருந்து உப்பு தோண்டி எடுக்கப்படுகிறது. அல்லது கடல்நீரை ஆவியாக்கி உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. எரி சோடாவும் குளோரினும் இதன் முக்கிய தொழில்துறை தயாரிப்புகள் ஆகும். மேலும் பாலிவினால் குளோரைடு, நெகிழிகள், காகித கூழ் மற்றும் பல பிற பொருட்கள் தயாரிக்க இது உதவுகிறது. ஆண்டுக்கு சுமார் இருநூறு மில்லியன் டன் உப்பின் உலகளாவிய உற்பத்தியில், சுமார் 6% உப்பே மனித நுகர்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. நீர் சீரமைப்பு நடவடிக்கைகள், விவசாய பயன்பாடு போன்ற பிற செயல்பாடுகளுக்கு எஞ்சிய உப்பு பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்கக இது கடல் உப்பு மற்றும் மேசை உப்பு என்ற வடிவங்களில் விற்கப்படுகிறது, உடலில் அயோடின் குறைபாட்டை நீக்க அயோடின்சேர்த்த உப்பு சமையலில் பயன்படுத்தப்படுகிறது. உணவைப் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.
மின்பகுளி மற்றும் சவ்வூடுபரவலுக்குரிய கரைபொருள் போன்ற தன்மைகளால் சோடியம் மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகிறதுஅதிகப்படியான உப்பு நுகர்வு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போன்றவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்கச் செய்கிறது. உப்பின் சுகாதார விளைவுகளை நீண்ட ஆய்வுகள் செய்த பல உலக சுகாதார அமைப்புகள் மற்றும் வல்லுநர்கள் உப்பு உணவுகளின் நுகர்வை குழந்தைகளும் பெரியவர்களும் குறைக்க வேண்டுமென பரிந்துரைக்கின்றனர் பெரியவர்கள் 2,000 மி.கி. அதாவது 5 கிராம் சோடியத்துக்கும் குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது[1].