ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; 21 ஏப்ரல் 1926 – 8 செப்டம்பர் 2022) என்பவர் 1952 பெப்ரவரி 6 முதல் 2022 இல் இறக்கும் வரை ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக இருந்தார்.[lower-alpha 2] இவரது 70 ஆண்டுகள், 214 நாட்கள் என்ற மொத்த ஆட்சிக்காலம் எந்த ஒரு பிரித்தானிய மன்னரிலும் மிக நீண்டதாகும், அத்துடன் இறையாண்மை கொண்ட எந்த மன்னரினதும் இரண்டாவது மிக நீண்ட ஆட்சியும் ஆகும். எலிசபெத் இறக்கும் போது, ஐக்கிய இராச்சியம் தவிர 14 பொதுநலவாய நாடுகளின் ராணியாகவும் இருந்தார்.[lower-alpha 3]
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் | |||||
---|---|---|---|---|---|
பொதுநலவாயத்தின் தலைவர் | |||||
1959 இல் எலிசபெத் மகாராணி | |||||
ஐக்கிய இராச்சியத்தினதும் ஏனைய பொதுநலவாயங்களினதும் மகாராணி பட்டியல்
| |||||
ஆட்சிக்காலம் | 6 பெப்ரவரி 1952 – 8 செப்டம்பர் 2022 | ||||
முடிசூடல் | 2 சூன் 1953 | ||||
முன்னையவர் | ஆறாம் சியார்ச் | ||||
பின்னையவர் | மூன்றாம் சார்லசு | ||||
பிறப்பு | எலிசபெத், யோர்க் இளவரசி (1926-04-21)21 ஏப்ரல் 1926 மாஃபெயார், இலண்டன், இங்கிலாந்து | ||||
இறப்பு | 8 செப்டம்பர் 2022(2022-09-08) (அகவை 96) பல்மோரல் கோட்டை, அபர்டீன்சயர், இசுக்கொட்லாந்து | ||||
புதைத்த இடம் | 19 செப்டம்பர் 2022 செயிண்ட் சியார்ச் தேவாலயம், வின்ட்சர் கோட்டை | ||||
துணைவர் | இளவரசர் பிலிப்பு (20 நவம்பர் 1947 – 9 ஏப்ரல் 2021) | ||||
குழந்தைகளின் #வாரிசுகள் |
| ||||
| |||||
மரபு | வின்சர் | ||||
தந்தை | ஆறாம் சியார்ச் | ||||
தாய் | எலிசபெத் போவ்சு-லயோன் | ||||
மதம் | சீர்திருத்தத் திருச்சபை[lower-alpha 1] | ||||
கையொப்பம் | |||||
கேப் டவுணில் நடைபெற்ற தனது 21-ஆவது பிறந்தநாள் விழாவில் எலிசபெத்தின் உரை 1947 ஏப்ரல் 21 இல் பதியப்பட்டது. |
எலிசபெத் இலண்டன், மேஃபெயார் என்ற இடத்தில் யோர்க் கோமகன் ஆல்பர்ட்டிற்கும் (பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னர்), எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக 1926 ஏப்ரல் 21 இல் பிறந்தார்.[2] தனது கொள்ளுப்பாட்டி அலெக்சாந்திரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார்.[3] தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.[4] 1936 இல் எட்டாம் எட்வர்டு மன்னர் முடிதுறந்ததை அடுத்து அவரின் இளைய சகோதரரும் எலிசபெத்தின் தந்தையுமான ஆல்பர்ட் ஆறாம் ஜோர்ஜ் என்ற பெயரில் மன்னராக முடிசூடினார். இதன் மூலம் எலிசபெத் முடிக்குரிய வாரிசாக அறிவிக்கப்பட்டார்.[5] எலிசபெத் வீட்டில் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார்,[6] இரண்டாம் உலகப் போரின் போது துணைப் பிராந்திய சேவையில் பணியாற்றினார்.[7] நவம்பர் 1947 இல், இவர் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் முன்னாள் இளவரசர் பிலிப் மவுண்ட்பேட்டனை (பின்னாளில் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்பு) மணந்தார்.[8] இவர்களது திருமணம் ஏப்ரல் 2021 இல் பிலிப்பு இறக்கும் வரை 73 ஆண்டுகள் நீடித்தது. இவர்களுக்கு மூன்றாம் சார்லசு; இளவரசி ஆன், யோர்க் கோமகன் இளவரசர் ஆண்ட்ரூ, வெசெக்சு கோமகன் இளவரசர் எட்வர்ட் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
1952 பெப்ரவரியில் இவரது தந்தை இறந்தபோது, அகவை 25 ஆக இருந்த எலிசபெத் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாக்கித்தான், இலங்கை ஆகிய ஏழு விடுதலை பெற்ற பொதுநலவாய நாடுகளின் ராணியானார். அத்துடன் பொதுநலவாயத்தின் தலைவரும் ஆவார். எலிசபெத் வடக்கு அயர்லாந்துப் பிரச்சனைகள், ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு, ஆப்பிரிக்காவின் குடியேற்றங்களை நீக்கல், ஈராக் போர் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றம் போன்ற முக்கிய அரசியல் மாற்றங்களின் மூலம் அரசியல்சட்ட முடியாட்சி முலம் ஆட்சி செய்தார். இவரது ஆளுகைக்கு உட்பட்ட பல நாடுகள் விடுதலை பெற்றும், சில குடியரசுகளாக மாறியதாலும் காலப்போக்கில் இவரது பகுதிகளின் எண்ணிக்கை குறைவடைந்தது. இவரின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும், 1986 இல் சீனாவிற்கும், 1994 இல் உருசியாவிற்கும், 2011 இல் அயர்லாந்து குடியரசிற்கும், ஐந்து திருத்தந்தைகளுடனான சந்திப்புகளும் முதன்மையானவை.
தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைர (2012), பவள (2022) விழாக் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்ச்சிகளாகும். அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. எலிசபெத் மிக நீண்ட காலம் வாழ்ந்த மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரித்தானிய ஆட்சியாளராக இருந்தார், அத்துடன் உலக வரலாற்றில் பிரான்சின் பதினான்காம் லூயிக்குப் பின்னர் இரண்டாவது மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர். இவர் அவ்வப்போது குடியரசுவாத உணர்வு மற்றும் ஊடக விமர்சனங்களை எதிர்கொண்டார், எனினும், ஐக்கிய இராச்சியத்தில் முடியாட்சிக்கான ஆதரவும், எலிசபெத்தின் தனிப்பட்ட புகழும் தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்தன.
இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் 8 இல் தனது 96-ஆவது அகவையில் அபர்டீன்சயர், பால்மோரல் அரண்மனையில் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லசு மன்னரானார்.[9]