சாளுக்கியர்
பண்டைய இந்தியாவின் அரச பரம்பரைகளில் ஒரு வகையினர். / From Wikipedia, the free encyclopedia
சாளுக்கியர் என்பவர்கள் இந்தியாவின் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக்கொண்ட இவர்கள், இந்திய வரலாற்றில் சிறந்த அரசர்களில் ஒருவனான, இரண்டாம் புலிகேசியின் (பொ.ஊ. 609–642) ஆட்சியின் போது வேகமாக முன்னணிக்கு வந்தனர். இவன் காலத்தில், தெற்கே பல்லவ நாட்டின் வடக்கு எல்லை வரை விரிவடைந்திருந்தது சாளுக்கியப் பேரரசு. வடக்கில், ஹர்சவர்தனரை நர்மதை நதிக்கரையில் தோற்கடித்து அவனது தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுத்தான். தென்கிழக்குத் தக்காணத்தில் விஷ்ணுகுண்டினர்களையும் தோற்கடித்தான். ஆனாலும், பல்லவன் நரசிம்மவர்மன், புலிகேசியைத் தோற்கடித்து அவனைக் கொன்று வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லவன் என்றும் பல்லவ வம்சமான இவன் மாவீரன் புலிகேசியை வென்றதால் "மா மல்லன்" எனும் பெயரும் பெற்று அதன் வெற்றியைக் கொண்டாட இன்றையச் சென்னையான பல்லவக் கடற்கரையில் மாமல்லையை உருவாக்கினான்.புலிகேசியின் தலைநகரான வாதாபியையும் ஆக்கிரமித்திருந்தான். சாளுக்கியரின் தலைநகரம் வாதாபி என்பதால் வாதாபி சாளுக்கியர் என்றும் அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
புலிகேசி II (பொ.ஊ. 640), விக்கிரமாதித்தன் II (பொ.ஊ. 735), விக்கிரமாதித்தன் VI (பொ.ஊ. 1120) ஆகியோரின் காலத்து மேலைச் சாளுக்கியப் பேரரசு. | |
அரச மொழிகள் | கன்னடம் |
தலை நகரங்கள் | முற்காலச் சாளுக்கியர்: வாதாபி பிற்காலச் சாளுக்கியர்: மன்யகேதா, பசவகல்யாண் |
அரசாங்கம் | முடியாட்சி |
வாதாபிச் சாளுக்கியருக்கு முற்பட்டவர் | கடம்பர் |
கல்யாணிச் சாளுக்கியருக்கு முற்பட்டவர் | இராஷ்டிரகூடர் |
கல்யாணிச் சாளுக்கியருக்கு பின்வந்தவர் | ஹொய்சலர், காக்கத்தியர், காலச்சூரி பேரரசு |
இரண்டாம் புலிகேசிக்குப் பின், உட் பூசல்களால் சாளுக்கியர் சிறிது காலம் வீழ்ச்சியுற்று இருந்தனர். இரண்டாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் மீண்டும் முன்னணிக்கு வந்தனர். இவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவனைத் தோற்கடித்து அவன் தலைநகரமான காஞ்சியையும் கைப்பற்றினான். இராஷ்டிரகூடர்களின் எழுச்சியைத் தொடர்ந்து வாதாபிச் சாளுக்கியர் தாழ்ச்சியுற்றனர்.
பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் தைலப்பா (பொ.ஊ. 973–997) என்பவனின் கீழ் சாளுக்கியர் மீண்டும் புகழ் பெறத் தொடங்கினர். இவர்கள் மேலைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர். மேலைச் சாளுக்கியர், இன்று பசவகல்யாண் என அழைக்கப்படும் கல்யாணி என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இன்னொரு பிரிவினர், வேங்கி என்னுமிடத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் கீழைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர். கீழைச் சாளுக்கிய நாட்டின் கட்டுப்பாட்டுக்காக, மேலைச் சாளுக்கியருக்குச் சோழருடன் ஓயாத போட்டி இருந்துவந்தது. சுமார் 300 ஆண்டுகள் புகழுடன் விளங்கிய சாளுக்கியர், போசளர்களினால் ஒடுக்கப்பட்டனர். பொ.ஊ. 1184 தொடக்கம் 1200 வரை ஆண்ட நான்காம் சோமேஸ்வரனே குறிப்பிடத்தக்க சாளுக்கியர்களில் இறுதியானவன் ஆவான்.