மங்கோலியப் பேரரசு
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இருந்த முன்னாள் நாடு / From Wikipedia, the free encyclopedia
மங்கோலியப் பேரரசு என்பது வரலாற்றின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு ஆகும். இது 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது.[5] கிழக்காசியாவிலுள்ள தற்போதைய மங்கோலியாவில் தோன்றியது. இதன் அதிகபட்ச பரப்பளவின்போது யப்பான் கடல் முதல் கிழக்கு ஐரோப்பாவின் பகுதிகள் வரையிலும், வடக்கே ஆர்க்டிக் பகுதிகள் வரையிலும்,[6] கிழக்கு மற்றும் தெற்கே இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா மற்றும் ஈரானியப் பீடபூமி வரையிலும், மேற்கே லெவண்ட் மற்றும் கார்பேத்திய மலைகள் வரையிலும் விரிவடைந்திருந்தது.
மங்கோலியத் தாயகத்தில் பல்வேறு நாடோடிப் பழங்குடியினங்கள் செங்கிஸ் கானின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டதிலிருந்து மங்கோலியப் பேரரசு தோன்றியது. 1206ஆம் ஆண்டு ஒரு அவையானது இவரை அனைத்து மங்கோலியர்களின் மன்னனாகப் பொது அறிவிப்புச் செய்தது. இவரது ஆட்சி மற்றும் இவரது வழித்தோன்றல்களின் ஆட்சியின்போது பேரரசானது வேகமாக விரிவடைந்தது. இவரது வழித்தோன்றல்கள் அனைத்துத் திசைகளிலும் படையெடுக்கும் இராணுவங்களை அனுப்பினர்.[7][8] வலிந்து செயற்படுத்தப்பட்ட மங்கோலிய அமைதியில், கண்டங்களில் பரவியிருந்த இப்பேரரசானது கிழக்குயும், மேற்கையும் இணைத்தது. அமைதிப் பெருங்கடலையும், நடுநிலக் கடலையும் இணைத்தது. இது வணிகம், தொழில்நுட்பங்கள், பண்டங்கள், மற்றும் சித்தாந்தங்கள் ஐரோவாசியா முழுவதும் விரைவாகப் பரவ மற்றும் பரிமாற்றப்பட அனுமதித்தது.[9][10]
அடுத்த ககான் யார் என்ற போரில் பேரரசானது பிரிய ஆரம்பித்தது. அரசகுலமானது ஒக்தாயியின் வழித்தோன்றல்களாக இருக்க வேண்டுமா அல்லது செங்கிஸ் கானின் மற்ற மகன்களான டொலுய், சகதாயி அல்லது சூச்சியின் வழித்தோன்றல்களாக இருக்க வேண்டுமா என செங்கிஸ் கானின் பேரன்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. ஒக்தாயி மற்றும் சகதாயி பிரிவுகளை ஒரு குருதி தோய்ந்த ஒழித்துக்கட்டலுக்குப் பிறகு டொலுய் வழித்தோன்றல்கள் வெற்றி கண்டனர். ஆனால் பிணக்கானது டொலுயின் வழித்தோன்றல்களுக்கு இடையிலும் தொடர்ந்தது. இந்தப் பிரிவுக்கு ஒரு முக்கியக் காரணமானது, மங்கோலியப் பேரரசானது நிலைகொண்டதும், பிறநாட்டுப் பண்பாட்டுத் தாக்கம் கொண்டதுமான பேரரசாக இருக்க வேண்டுமா அல்லது நாடோடி மற்றும் புல்வெளியை அடிப்படையாகக் கொண்ட மங்கோலிய வாழ்க்கை முறைக்கு உண்மையாக இருக்க வேண்டுமா என ஏற்பட்ட சண்டையேயாகும். 1259ஆம் ஆண்டு மோங்கே கான் இறந்த பிறகு, இரண்டு எதிரெதிர்க் குறுல்த்தாய் அவைகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு புதிய ககான்களைத் தேர்ந்தெடுத்தன. அவர்கள் அண்ணன் தம்பிகளான குப்லாய் கான் மற்றும் அரிக் போகே ஆவர். இவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் டொலுய் உள்நாட்டுப் போரில் சண்டையிட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் செங்கிஸ் கானின் மற்ற மகன்களின் வழித்தோன்றல்களிடமிருந்து ஏற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டனர்.[11][12] குப்லாய் வெற்றிகரமாக ஆட்சியைக் கைப்பற்றினார். சகதாயி மற்றும் ஒக்தாயி குடும்பங்களைக் கட்டுப்படுத்தக் குப்லாய் செய்த முயற்சி காரணமாக உள்நாட்டுப் போரானது மீண்டும் ஏற்பட்டது. குப்லாயின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
செங்கிஸ் கான் மற்றும் ஒக்தாயி கானின் ஆட்சியின் போது, திறமை குறைந்த ஒரு தளபதி படைக்குத் தலைமையேற்ற போது மங்கோலியர்கள் சில நேரங்களில் தோல்வியடைந்தனர். சைபீரியத் துமேதுகள் 1215-1217ல் போரோகுலா தலைமையிலான மங்கோலியப் படைகளைத் தோற்கடித்தனர். 1221ஆம் ஆண்டு ஜலாலத்தீன் பர்வான் யுத்தத்தில் சிகி குதுகுவைத் தோற்கடித்தார். 1230ஆம் ஆண்டு தோல்கோல்குவைச் சின் தளபதிகளான கெதாவும், புவாவும் தோற்கடித்தனர். ஒவ்வொரு முறையும், தங்களது சிறந்த தளபதிகளில் ஒருவரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பெரிய இராணுவத்துடன் மங்கோலியர்கள் சீக்கிரமே திரும்பி வந்தனர். ஒவ்வொரு முறையும் நிலையான வெற்றியைப் பெற்றனர். 1260ஆம் ஆண்டு கலிலேயாவில் நடந்த ஐன் ஜலுட் யுத்தமானது முதல் முறையாக மங்கோலியர்கள் சீக்கிரமே தங்களது தோல்வியைப் பழிதீர்க்கத் திரும்பி வராத நிகழ்வைக் குறித்தது. இதற்குச் சில நிகழ்வுகள் காரணங்களாக அமைந்தன. அவை, 1259ஆம் ஆண்டு மோங்கே கான் இறந்தது, அரிக் போகே மற்றும் குப்லாய் கானுக்கு இடையிலான டொலுய் உள்நாட்டுப் போர், மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கே கான் பாரசீகத்தில் குலாகு கானைத் தாக்கியது ஆகியவையாகும். மங்கோலியர்கள் மேலும் பல படையெடுப்புகளை லெவண்ட் மீது நடத்தினர். குறுகிய காலத்திற்கு அதை ஆக்கிரமித்திருந்தனர். 1299ஆம் ஆண்டு வடி அல்-கசுனதர் யுத்தத்தில் பெற்ற ஒரு தீர்க்கமான வெற்றிக்குப் பிறகு காசா வரை முன்னேறினர். எனினும் பல புவிசார் அரசியல் கூறுகள் காரணமாக அங்கிருந்து விலகிச் சென்றனர்.
1294ஆம் ஆண்டு குப்லாய் இறந்தபோது மங்கோலியப் பேரரசானது, நான்கு வெவ்வேறு கானரசுகள் அல்லது பேரரசுகளாக உடைந்தது. ஒவ்வொரு அரசும் தத்தமது நோக்கம் மற்றும் குறிக்கோள்களைப் பின்பற்ற ஆரம்பித்தது. அவ்வரசுகள் வடமேற்கே தங்க நாடோடிக் கூட்டக் கானரசு, நடு ஆசியாவில் சகதாயி கானரசு, தென்மேற்கே ஈல்கானரசு மற்றும் தற்கால பெய்ஜிங்கை அடிப்படையாகக் கொண்டிருந்த கிழக்கிலிருந்த யுவான் அரசமரபு[note 3] ஆகியவை ஆகும்.[17] 1304ஆம் ஆண்டு தெமூரின் ஆட்சியின்போது மூன்று மேற்குக் கானரசுகளும் யுவான் அரசமரபின் பெயரளவிலான தலைமையை ஏற்றுக் கொண்டன.[18][19]
1368ஆம் ஆண்டு ஆன் சீனர்களால் ஆளப்பட்ட மிங் அரசமரபானது யுவான் தலைநகரான தடுவைக் கைப்பற்றியது. இந்நிகழ்வு உள் சீனாவில் யுவான் அரசமரபின் வீழ்ச்சியைக் குறித்தது. யுவானை ஆண்ட செங்கிஸ் கானின் வழிவந்த ஆட்சியாளர்கள் வடக்கு நோக்கிப் பின்வாங்கினர். மங்கோலியப் பீடபூமியைத் தொடர்ந்து ஆண்டு வந்தனர். இந்த அரசானது வரலாற்றில் வடக்கு யுவான் அரசமரபு என்று அறியப்படுகிறது. 1335–1353 காலகட்டத்தில் ஈல்கானரசானது பல துண்டுகளாக உடைந்தது. 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் தங்க நாடோடிக் கூட்டமானது ஒன்றோடொன்று போட்டியிட்ட கானரசுகளாக உடைந்து போனது. மாஸ்கோவின் மாட்சி மிக்க வேள் பகுதியால் 1480ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டு, உருசியாவில் இருந்து தூக்கியெறியப்பட்டது. அதே நேரத்தில் சகதாயி கானரசானது ஒரு வடிவம் அல்லது மற்றொரு வடிவத்தில் 1687ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தது.