தைமூர்
துருக்கிய-மங்கோலிய இராணுவத் தலைவர் மற்றும் படையெடுப்பாளர் (1336-1405) / From Wikipedia, the free encyclopedia
தைமூர் (9 ஏப்ரல் 1336 – 17–19 பெப்ரவரி 1405) என்பவர் ஒரு துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளர் ஆவார். இவர் தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்தார். தைமூரியப் பேரரசின் பகுதிகள் தற்போதைய ஆப்கானித்தான், ஈரான் மற்றும் நடு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ளன. தைமூரிய அரசமரபையும் இவர் தோற்றுவித்தார். தோற்கடிக்கப்படாத படைத்தலைவரான இவர், வரலாற்றில் முக்கியமான இராணுவத் தலைவர்கள் மற்றும் தந்திரோபாயவாதிகளில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.[4][5] பெரிய கலை மற்றும் கட்டடக் கலைப் புரவலராகக் கருதப்படுகிறார். இப்னு கல்தூன் மற்றும் அபீசி அபுரு போன்ற அறிஞர்களிடம் உரையாடியுள்ளார். இவரது ஆட்சிக் காலம் தைமூரிய மறுமலர்ச்சியை அறிமுகப்படுத்தியது.[4]:341–2
தைமூர் தெமுர் | |||||
---|---|---|---|---|---|
தைமூரின் மண்டை ஓட்டில் இருந்து சோவியத் அறிஞர் மிக்கைல் மிக்கைலோவிச் செராசிமோ மறுசீரமைப்பு செய்த தைமூரின் முகம் | |||||
தைமூரிய வம்சத்தின் அமீர் | |||||
ஆட்சி | 9 ஏப்ரல் 1370 – 14 பெப்ரவரி 1405 | ||||
முடிசூட்டு விழா | 9 ஏப்ரல் 1370[2] | ||||
முன்னிருந்தவர் | அமீர் உசைன் | ||||
பின்வந்தவர் | கலில் சுல்தான் | ||||
துணைவர் | சராய் முல்க் கனும் | ||||
வாரிசு(கள்) |
| ||||
| |||||
மரபு | தைமூர் வம்சம் | ||||
தந்தை | அமீர் தரகை | ||||
தாய் | தெக்கினா கதுன் | ||||
பிறப்பு | 9 ஏப்ரல் 1336 [2] கேசு, சகதாயி கானரசு (இன்றைய உசுபெக்கித்தானில் ஷாரிசப்ஸ்) | ||||
இறப்பு | 18 பெப்ரவரி 1405 (அகவை 68) ஒற்றார், தைமூரியப் பேரரசு (தற்போது ஒற்றார், கசக்கஸ்தான்) | ||||
அடக்கம் | குர்-இ அமீர், சமர்கந்து, உசுபெக்கிசுத்தான் | ||||
சமயம் | சன்னி இசுலாம் |
திரான்சாக்சியானாவில் (தற்போதைய உசுபெக்கிசுத்தான்) இருந்த பர்லாசு கூட்டமைப்பில் 9 ஏப்ரல் 1336ஆம் ஆண்டு தைமூர் பிறந்தார். 1370ஆம் ஆண்டுவாக்கில் சகதாயி கானரசின் மேற்குப் பகுதியின் கட்டுப்பாட்டைத் தைமூர் பெற்றார். அப்பகுதியைத் தன்னுடைய அடிப்படைப் பகுதியாகக் கொண்டு மேற்கு, தெற்கு மற்றும் நடு ஆசியா, காக்கேசியா மற்றும் தெற்கு உருசியா ஆகிய பகுதிகள் மீதான இராணுவப் படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கினார். எகிப்து மற்றும் சிரியாவின் அடிமை வம்சம், வளர்ந்துகொண்டிருந்த உதுமானியப் பேரரசு மற்றும் இந்தியாவின் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த தில்லி சுல்தானகம் ஆகிய நாடுகளைத் தோற்கடித்த பிறகு இசுலாமிய உலகின் மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளராகத் தைமூர் உருவானார்.[6] இந்தப் படையெடுப்புகள் மூலமாகத் தைமூரியப் பேரரசைத் தோற்றுவித்தார். எனினும், இவரது இறப்பிற்குப் பிறகு இப்பேரரசு சிதறுண்டது.
ஐரோவாசியப் புல்வெளியின் பெரிய நாடோடிப் படையெடுப்பாளர்களில் கடைசியானவர் தைமூர். 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் நல்ல கட்டமைப்புடைய மற்றும் நீடித்திருந்த இசுலாமிய வெடிமருந்துப் பேரரசுகள் வளர்வதற்கு தைமூரியப் பேரரசு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.[7][8][9] தைமூர் துருக்கிய மற்றும் மங்கோலிய வழித்தோன்றல் ஆவார். ஆனால், இரண்டு பக்கமும் இவர் நேரடி வழித்தோன்றல் கிடையாது. இவரது தந்தை வழி மூதாதையர் மற்றும் செங்கிஸ் கான் ஆகியோர் ஒரே மூதாதையரைக் கொண்டிருந்தனர்.[10][11][12] சில எழுத்தாளர்கள் தைமூரின் தாய் கானின் வழித்தோன்றலாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.[13][14] தனது வாழ்நாளில் செங்கிஸ் கானின் படையெடுப்புகளின் மரபை மீண்டும் உருவாக்கத் தைமூர் முயற்சி செய்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.[15] செங்கிஸ் கானின் (இறப்பு 1227) மங்கோலியப் பேரரசை மீட்டெடுப்பதைப் பற்றித் தைமூர் கனவு கண்டார். செரார்டு சலியந்த் என்கிற பிரெஞ்சு அறிஞரின் கூற்றுப் படி தைமூர் தன்னைச் செங்கிஸ் கானின் வாரிசு என்று கருதினார்.[16]
பீட்ரைசு போர்ப்சு மேன்சு என்கிற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி "தனது வாழ்நாள் முழுவதும் தைமூர் தனது அதிகாரப்பூர்வ கடிதத் தொடர்பில் தன்னை செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் உரிமைகளை மீட்டெடுப்பவராக அடையாளம் காட்டிக் கொண்டார். அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீது மீண்டும் மங்கோலிய ஆட்சியை நிறுவுவதற்காக தன்னுடைய ஈரானிய, அடிமை வம்ச மற்றும் உதுமானியப் படையெடுப்புகள் இருந்ததாக நியாயப்படுத்தினார்".[17] தனது படையெடுப்புகளை மேலும் நியாயப்படுத்த தைமூர் இசுலாமியச் சின்னங்கள் மற்றும் மொழியைச் சார்ந்து இருந்தார். தன்னை "இசுலாமின் வாள்" என்று குறிப்பிட்டுக் கொண்டார். கல்வி மற்றும் மத நிறுவனங்களுக்குப் புரவலராக விளங்கினார். தன்னுடைய வாழ்நாளில் கிட்டதட்ட அனைத்து போர்சிசின் தலைவர்களையும் இசுலாம்முக்கு மதம் மாற்றினார். இசுமைர்னா கோட்டை முற்றுகையின் போது தைமூர் கிறித்தவ குதிரை வீரர்களைத் தீர்க்கமாகத் தோற்கடித்தார். தன்னை காசி என்று அழைத்துக் கொண்டார்.[4]:91 தனது ஆட்சிக் காலம் முடியும் போது தைமூர் சகதாயி கானரசு, ஈல்கானரசு மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகியவற்றின் அனைத்து எஞ்சிய பகுதிகள் மீதும் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். சீனாவில் யுவான் அரசமரபை மீண்டும் நிறுவுவதற்குக் கூட முயற்சிகள் மேற்கொண்டார்.
தைமூரின் இராணுவங்கள் பல்வேறு இனத்தைச் சேர்ந்த போர் வீரர்களைக் கொண்டிருந்தன. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்கள் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தின.[4] இக்கண்டங்களில் இவரது படையெடுப்புகள் கணிசமான பகுதிகளுக்கு அழிவை ஏற்படுத்தின.[18] அறிஞர்களின் மதிப்பீட்டின் படி இவரது படையெடுப்புகள் 1.7 கோடி மக்களின் இறப்பிற்குக் காரணமாயிருந்தன. இது அந்நேரத்தில் உலக மக்கள் தொகையில் சுமார் 5% ஆகும்.[19][20] இவரால் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும், இவரது படையெடுப்பால் அதிக பாதிப்பைச் சந்தித்தது குவாரசமியா பகுதியாகும். ஏனெனில், அப்பகுதி இவருக்கு எதிராக அடிக்கடி கிளர்ந்தெழுந்தது.[21]
நடு ஆசியாவை 1411 முதல் 1449 வரை ஆண்ட தைமூரிய சுல்தான், வானியலாளர் மற்றும் கணிதவியலாளரான உலுக் பெக்கின் தாத்தா இந்தத் தைமூர் ஆவார். இந்தியத் துணைக்கண்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த முகலாயப் பேரரசைத் தோற்றுவித்த பாபரின் (1483-1530) சேயோன் இந்தத் தைமூர் ஆவார்.[22][23]