தமிழ்நாடு
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது.
தமிழ்நாடு
தமிழகம் | |
---|---|
மேல் இடமிருந்து வலம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், மெரீனா கடற்கரை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், ஒகேனக்கல் அருவி, திருவள்ளுவர் சிலை, மற்றும் நீலகிரி மலைகள் | |
சொற்பிறப்பு: தமிழர் நாடு | |
குறிக்கோளுரை: வாய்மையே வெல்லும் | |
பண்: "தமிழ்த்தாய் வாழ்த்து"^# | |
இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°N 79°E | |
நாடு | இந்தியா |
பிராந்தியம் | தென்னிந்தியா |
முன்பு இருந்தது | மதராசு மாநிலம்^† |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 (67 ஆண்டுகள் முன்னர்) (1956-11-01) |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சென்னை |
மாவட்டம் | 38 |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு |
• ஆளுநர் | ஆர். என். ரவி |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் (திமுக) |
சட்டவாக்க அவை | ஓரவை |
• சட்டப் பேரவை | தமிழ்நாடு சட்டப் பேரவை (234 தொகுதிகள்) |
தேசிய பாராளுமன்றம் | இந்திய நாடாளுமன்றம் |
• மாநிலங்களவை | 18 தொகுதிகள் |
• மக்களவை | 39 தொகுதிகள் |
உயர் நீதிமன்றம் | மதராசு உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,30,058 km2 (50,216 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 10-ஆவது |
Dimensions | |
• நீளம் | 1,076 km (669 mi) |
ஏற்றம் | 189 m (620 ft) |
உயர் புள்ளி | 2,636 m (8,648 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 7,21,47,030 |
• தரவரிசை | 6-ஆவது |
• அடர்த்தி | 554.7/km2 (1,437/sq mi) |
• நகர்ப்புறம் | 48.4% |
• கிராமப்புறம் | 51.6% |
இனம் | தமிழர் |
மொழி | |
• அலுவல்மொழி | தமிழ்[2] |
• கூடுதல் அலுவல்மொழி | ஆங்கிலம்[2] |
• அதிகாரப்பூர்வ எழுத்துமுறை | தமிழ் எழுத்து முறை |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
• மொத்தம் (2022-23) | ₹23.65 டிரில்லியன் (US$300 பில்லியன்) |
• தரவரிசை | 2-ஆவது |
• தனிநபர் | ₹2,75,583 (US$3,500) (9-ஆவது) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-TN |
வாகனப் பதிவு | TN |
மனித வளர்ச்சி சுட்டெண் (2021) | 0.686 Medium[5] (14-ஆவது) |
கல்வியறிவு (2011) | 80.09%[6] (14-ஆவது) |
பாலின விகிதம் (2011) | 996 ♀/1000 ♂ (3-ஆவது) |
கடற்கரை | 1,076 கி.மீ (669 மைல்) |
இணையதளம் | tn |
சின்னங்கள் | |
பாடல் | "தமிழ்த்தாய் வாழ்த்து"^# |
நடனம் | பரதநாட்டியம் |
விலங்கு | நீலகிரி வரையாடு |
பறவை | மரகதப்புறா |
மலர் | காந்தள் |
பழம் | பலா |
மரம் | ஆசியப் பனை |
பூச்சி | தமிழ் மறவன் பட்டாம்பூச்சி |
விளையாட்டு | கபடி |
மாநில நெடுஞ்சாலைக் குறி | |
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் மா.நெ. 1 - மா.நெ. 223 | |
இந்திய மாநில சின்னங்களின் பட்டியல் | |
^# ஜன கண மன என்னும் பாடலானது தேசிய கீதம், "தமிழ்த்தாய் வாழ்த்து" என்பது மாநில பாடல்/கீதம். ^† 1773-இல் நிறுவப்பட்டது; மதராசு மாநிலம் 1950-இல் உருவானது மற்றும் 14 சனவரி 1969-இல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. |
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தக்காணப் பீடபூமி, வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை புவியியல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை மற்றும் தென் முனையில் இலட்சத்தீவுக் கடல் ஆகிய நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கில் கேரளம், வடமேற்கில் கருநாடகம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
தொல்லியல் சான்றுகள் தமிழ்நாட்டில் மக்கள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதையும், 5,500 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கலாச்சார வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்று ரீதியாக, பண்டைய தமிழகப் பகுதியில் தமிழ் மொழி பேசிய திராவிட மக்கள் வசித்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக சங்க காலம் தொட்டு சேரர், சோழர் மற்றும் பாண்டியரால் ஆளப்பட்டது. பிற்காலத்தில் பல்லவர் (பொ.ஊ. 3-9 ஆம் நூற்றாண்டு) மற்றும் விசயநகர பேரரசின் (பொ.ஊ. 14-17 ஆம் நூற்றாண்டு) கீழ் வந்த இப்பகுதியில், 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வரத் தொடங்கினர். 1947 இல் இந்திய விடுதலைக்கு முன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு தென்னிந்தியாவின் பெரும்பகுதி பிரித்தானிய கட்டுப்பாட்டில் சென்னை மாகாணமாக ஆட்சி செய்யப்பட்டது. விடுதலைக்கு பிறகு மதராசு மாநிலம் என மாறிய இப்பகுதி, ௧௯௫௬ ஆம் ஆண்டின் மொழிவாரி மறுசீரமைப்புக்குப் பிறகு தற்போதைய வடிவம் பெற்றது. 1969 இல் "தமிழ் நாடு" என பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாக உள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பதினாறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; மூன்று உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மாநிலத்தின் பரப்பளவில் ஏறத்தாழ 17.4% காடுகளைக் கொண்டுள்ள இங்கு மூன்று உயிர்க்கோள காப்பகங்கள், சதுப்புநில காடுகள், ஐந்து தேசிய பூங்காக்கள், 18 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 17 பறவை சரணாலயங்கள் உள்ளன. தமிழ்த் திரையுலகம் மாநிலத்தின் பிரபலமான கலாச்சாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பங்கு வகிக்கிறது.